தமிழக அதிகாரிகளை தாக்கும் அளவுக்கு போன பசு வன்முறை.. ராஜஸ்தானில் பாஜக அடி வாங்கியது எப்படி?
Recommended Video
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், பசுமாடுகள் பாதுகாப்பு தொடர்பான மோதல்கள் அதிகம் நடைபெற்ற பகுதிகளில், பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது.
ராஜஸ்தானில் ஆல்வார்-பரத்பூர் பகுதிகளில் 2014ம் ஆண்டு முதல் பசுமாடு தொடர்பான வன்முறைகள் அதிகரித்தபடி இருந்தன. பால் பண்ணை விவசாயி பேலு கான் மற்றும் உமர் கான் ஆகியோர் மாடுகளை வாகனத்தில் ஏற்றிச் சென்றபோது படுகொலை செய்யப்பட்டனர்.
பசு பாதுகாவலர்களை கட்டவிழ்த்துவிடுவதன் மூலம், மதரீதியாக ஆதாயம் பெறலாம் என்று வசுந்தராராஜே தலைமையிலான ஆளும் பாஜக திட்டமிட்டு செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், அப்படியாக பாஜகவால் வாக்குகளை ஈர்க்க முடியவில்லை.
சட்டசபை தொகுதிகள்
பசு மாடு தொடர்பான தாக்குதல்கள் அதிகம் நடைபெற்ற மண்டலத்தில்தான் பாஜகவிற்கு மக்கள் செம அடி கொடுத்துள்ளனர். இந்த பிராந்தியத்தில் உள்ள 18 சட்டசபை தொகுதிகளில் வெறும் 2 தொகுதிகளை மட்டுமே பாஜகவால் வெல்ல முடிந்துள்ளது. பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதற்கு இந்த பகுதிகளில் கிடைத்த அடி முக்கிய காரணம். மக்கள் அமைதியான வாழ்க்கையைதான் விரும்புவார்கள், வன்முறையை விரும்பமாட்டார்கள் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
லோக்சபா இடைத்தேர்தலிலும்
சமீபத்தில் நடைபெற்ற ஆல்வார் லோக்சபா தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ்தான் வெற்றி பெற்றிருந்ததும் நினைவுகூறத்தக்கது. இந்த லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட 11 சட்டசபை தொகுதிகளில், பாஜக 2 தொகுதிகளை வென்றுள்ளது. காங்கிரஸ் 4 தொகுதிகளை வென்றுள்ளது.
முந்தைய தேர்தலில் அபாரம்
பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சைகள் தலா 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். 2013 சட்டசபை தேர்தலில் ஆல்வார் பகுதியில் 9 சட்டசபை தொகுதிகளை பாஜக வென்றது. காங்கிரஸ் ஒரு தொகுதியில்தான் வென்றது. பரத்பூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட 7 சட்டசபை தொகுதிகளில், காங்கிரஸ் 4 தொகுதிகளை வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சி, ராஷ்டிரிய லோக் தளம் ஒரு தொகுதியை கைப்பற்றியது. பகுஜன் சமாஜ் 2 தொகுதிகளை வென்றுள்ளது.
ஒரு தொகுதியும் இல்லை
2013 சட்டசபை தேர்தலின்போது, பாஜக 6 தொகுதிகளை இங்கே வென்றது. காங்கிரஸ் 1 தொகுதியை மட்டும் வென்றது. ஆனால், இம்முறை பாஜக ஒரு தொகுதியிலும் வெல்ல முடியவில்லை. கடந்த வருடம், பசு வன்முறை தொடர்பாக, ராஜஸ்தானில் 389 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016ல் 474 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தமிழக அதிகாரிகள்
ஆல்வார், பரத்பூர் மட்டுமின்றி ராஜஸ்தானின் பிற பகுதிகளிலும் பசு குண்டர்கள் தாக்குதல் பரவலாக நடைபெற்றது. 5 லாரிகளில் பசுமாடுகளை ஏற்றிக்கொண்டு வந்த, தமிழக கால்நடைத்துறை அதிகாரிகள், பசு குண்டர்களால் தாக்கப்பட்டனர். ஜெய்சல்மர் நகரின் சுற்று வட்ட பகுதிகளில் 50 பசுக்கள் மற்றும் கன்று குட்டிகளை கொள்முதல் செய்து லாரிகளில் தமிழகம் கொண்டு வந்தபோது, பார்மர் மாவட்டத்தில் உள்ள சதார் நகர் அருகே பசு குண்டர்கள் சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்தியதில் தமிழக அதிகாரிகள், லாரி டிரைவர்கள், கிளீனர்கள் காயமடைந்தனர். தடையில்லா சான்றுடன் பசுக்களை கொண்டு வந்தபோதே இந்த தாக்குதல் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.