மே.வ.சட்டசபை தேர்தல் பிரசாரம் களைகட்ட தொடங்கியது.. மமதாவின் ஆப்சென்ட்டை வைத்து பாஜக ஆட்டம்
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை பாஜக கையில் எடுத்திருக்கிறது. கொரோனா விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் செயல்பாடுகளை விமர்சித்து தமது பிரசாரத்தை பாஜக தொடங்கியுள்ளது.
Recommended Video
தமிழகம, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற வேண்டும். தற்போதைய கொரோனா நெருக்கடியால், மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் ஒத்திவைக்கப்படலாம் என கூறப்பட்டு வருகிறது.
ஆனால் மேற்கு வங்கத்தின் அரசியல் நிலவரமோ, இப்போதே தேர்தல் பிரசாரம் களைகட்டிவிட்டதாகவே தெரிகிறது. கொரோனா விவகாரத்தை முன்வைத்து மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் மத்தியில் ஆளும் பாஜகவும் நடத்தும் கச்சேரி களைகட்டியிருக்கிறது.
ரஷ்யாவில் கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு.. ஸ்பெயினை முந்தும் வேகம்
பாஜகவின் தேர்தல் பிரசாரம்
மமதா பானர்ஜி கடந்த 10 நாட்களாக செய்தியாளர்களை சந்திக்கவில்லை. இதனை முன்வைத்து மமதா பானர்ஜி எங்கே? என்று கேள்வி எழுப்பி சமூக வலைதளங்களில் #BhoyPeyecheMamata என்ற ஹேஷ்டேக்கில் பாஜக படுதீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது. பாஜகவின் தேசிய இணை பொதுச்செயலாளர் ஷிவ் பிரகாஷ், மேற்கு வங்கத்தில் தொடக்கம் முதல் ரேஷன் அரிசி கார்டு மோசடி நடைபெற்று வருகிறது; கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மக்களை மம்தா பானர்ஜி அரசு கண்டுகொள்ளவில்லை என விமர்சித்துள்ளார்.
போலீஸ் தாக்குதல்
பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மருத்துவர்கள் உபகரணங்கள் கேட்டு போராடுகின்றனர்; நோயாளிகளோ செத்து மடிகிறார்கள். பிற மாநில தொழிலாளர்கள் மாநிலங்களை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை. பெங்காலிகளை மீண்டும் மாநிலத்துக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. மருத்துவமனைகளோ நோயாளிகளை சேர்க்க மறுக்கிறது; அரசு அதிகாரிகளை மமதா போலீஸ் தாக்குகிறது என கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
மமதா பானர்ஜி எங்கே?
பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் முகுல் ராய் கூறுகையில், மமதா பானர்ஜி அவர்களே? எங்கே இருக்கிறீர்கள்? மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது; இப்போதும் கூட பரிசோதனைகள் எண்ணிக்கை மிக குறைவாகத்தானே இருக்கிறது! பிற மாநிலங்களில் இருந்து பெங்காலி தொழிலாளர்களை மாநிலத்துக்குள் அனுமதிக்க மறுக்கிறீர்களே? ஏன்? #BhoyPeyecheMamata என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். பாஜகவின் இத்தனை ஆட்டங்களுக்கும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸும் தடுப்பு ஆட்டம் ஆடி வருகிறது.
திரிணாமுல் காங். பதிலடி
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான டெரிக் ஓ பிரைன், எங்களை நோக்கி எழுப்புகிற அத்தனை கேள்விகளுக்கும் நாங்கள் பதில் தந்து கொண்டிருக்கிறோம். இடர்பாடு மிக்க நெருக்கடியான நேரத்தில் எங்கள் முதல்வர் மமதா பானர்ஜியே முன்களத்தில் நின்று பணியாற்றுகிறார். ஆனால் பிரதமர் மோடியோ, 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் பத்திரிகையாளர்களை ஒருமுறை கூட சந்தித்து பேசவில்லையே ஏன் என்று எதிர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கொரோனா விவகாரத்தை முன்வைத்து மேற்கு வங்கத்தில் பாஜக, சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டது என்றும் விமர்சித்தார்.