'கருப்புக்கொடி' மோடி மோடி என கோஷம்! குஜராத் பிரசார கூட்டத்தில் அசாதுதீன் ஓவைசிக்கு எதிர்ப்பு
அகமதாபாத்: குஜராத்தில் டிசம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு பல்வேறு கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இதில், ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் மோடி மோடி என கோஷமிட்டதாலும் கருப்புக்கொடி காண்பித்ததாலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
182- தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டங்களாக வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது.

குஜராத் சட்டசபை தேர்தல்
ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைக்கவும் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் ஆட்சியை கைப்பற்றவும் கோதாவில் இறங்கியுள்ளன. ஐதராபாத் எம்.பி ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் குஜராத்தில் போட்டியிடுகிறது. மேற்கு வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களிலும் ஓவைசி கட்சி போட்டியிட்டது. சிறுபான்மை வாக்குகளை பிரித்து பாஜகவின் பி டீம் போல ஓவைசி செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் ஒருபக்கம் விமர்சனங்கள் முன்வைத்தாலும் ஓவைசி கட்சி போட்டியிட்டு வருகிறது.

ஓவைசி பிரசாரம்
அந்த வகையில் குஜராத்தில் சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் மட்டும் ஓவைசி கட்சி போட்டியிடுகிறது. ஏஐஎம்ஐஎம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஓவைசி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சூரத் கிழக்கு தொகுதியில் போட்டியிடும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து ஓவைசி பிரசாரம் மேற்கொள்வதற்காக வந்திருந்தார்.

மோடி மோடி என கோஷம்
நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் பேசுவதற்காக ஓவைசி மேடை ஏறியதும் அங்கு இருந்த முஸ்லிம் இளைஞர்கள் உள்பட சில இளைஞர்கள் மோடி மோடி என கோஷம் எழுப்பினர். ஓவைசிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடிகளையும் காட்டினர். இதனால், கூட்டத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருந்தாலும் இதை கண்டுகொள்ளாமல் ஓவைசி பேசத்தொடங்கினார்.

ரயில் மீது கல்வீச்சு
முன்னதாக கடந்த வாரம் ஓவைசி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக அகமதாபாத் நகரில் இருந்து சூரத் நகரத்திற்கு வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்தார். சூரத் நகரத்திற்கு முன்பு ரயில் வந்த போது மர்ம நபர்கள் ரயில் மீது கற்களை வீசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. வந்தே பாரத் ரயிலின் ஜன்னலை நோக்கி கற்கள் வீசப்பட்டதாகவும் இதில் ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்ததாகவும் ஓவைசி கட்சியின் செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டியிருந்தார்.

குஜராத் போலீசார் மறுப்பு
ஆனால் இதுபோன்ற சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்று மறுத்த குஜராத் ரயில்வே போலீசார், ஓவைசி பயணித்த ரயில் பெட்டியில் ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்ததாகவும் விளக்கம் அளித்து இருந்தனர்.












Click it and Unblock the Notifications