கறுப்பு பண விசாரணைக்கு வெளிநாட்டு வங்கிகள் ஒத்துழைப்பு! இந்தியாவிடம் வந்த 24,000 ரகசிய ஆவணங்கள்!!
டெல்லி: வெளிநாடுகளில் இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டு உள்ள கறுப்பு பணத்தை மீட்பது தொடர்பான விசாரணையில், இதுவரை, மத்திய அரசுக்கு, 24 ஆயிரம் ரகசிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில், இந்தியர்களால் பெரும் அளவிலான கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, புகார் கூறப்பட்டு வருகிறது. மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டாத நிலையில், பாஜக தலைமையிலான மத்திய அரசு, கறுப்பு பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.
சிறப்பு புலனாய்வு குழு
கறுப்பு பணத்தை மீட்க, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கறுப்பு பணம் குறித்து தகவல் தருமாறு வெளிநாடுகளுடன் செய்த ஒப்பந்தத்தின்படி, அங்கு இந்தியர்களால் பதுக்கி வைக்கப் பட்டுள்ள பணம் குறித்த முக்கிய தகவல்களை, சில நாடுகள், மத்திய நிதி அமைச்சகத்துக்கு தெரிவித்துள்ளன.
24 ஆயிரம் ஆவணங்கள்
அந்த நாடுகளில் உள்ள வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ள மற்றும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் குறித்த பட்டியல், அந்த தகவலில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை, 24ஆயிரம் ரகசிய ஆவணங்கள் வெளிநாடுகளில் இருந்து, மத்திய அரசுக்கு கிடைத்துஉள்ளன.
எந்தெந்த நாடுகளில் இருந்து எவ்வளவு?
அதிகபட்சமாக, நியூசிலாந்தில் இருந்து, 10,372 ஆவணங்களும், ஸ்பெயினிலிருந்து, 4,169 ஆவணங்களும், பிரிட்டனில் இருந்தும், 4,164 ஆவணங்களும், ஸ்வீடனில் இருந்து 2,404 ஆவணங்களும், டென்மார்க்கில் இருந்து 2,145 ஆவணங்களும், ஃபின்லாந்தில் இருந்து 685 ஆவணங்களும், போர்ச்சுக்கலில் இருந்து 625 ஆவணங்களும், ஜப்பானில் இருந்து 440 ஆவணங்களும், ஸ்லோவேனியா நாட்டில் இருந்து 44 ஆவணங்களும் கிடைத்துள்ளன.
விரைவில் விசாரணை
ஆஸ்திரேலியா, மெக்சிகோ போன்ற நாடுகளும் சிறு அளவில் ஆவணங்களை பகிர்ந்து கொண்டுள்ளன. இந்த ஆவணங்கள் அனைத்தையும், மத்திய நிதி அமைச்சகம், சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைத்துள்ளது.இதன்அடிப்படையில், சிறப்பு புலனாய்வு குழு, விரைவில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
சுவிட்சர்லாந்து சட்டத்தில் திருத்தம்
இதற்கிடையே, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கொடுத்த நெருக்கடியை அடுத்து, சுவிட்சர்லாந்து அரசு, தங்கள் சட்டத்தில் சில திருத்தங்களை செய்துள்ளது. இதன்படி, இந்தியா உள்ளிட்ட நாடுகள், சந்தேகத்தின் அடிப்படையில், சுவிட்சர்லாந்தில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். இந்த சட்ட திருத்தம், இந்த மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது.