மோடி அரசுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். ஆதரவு தொழிற்சங்கம் 26-ந் தேதி முதல் நாடு தழுவிய போராட்டம்!
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசு பெருநிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுவதை எதிர்த்து பாரதிய ஜனதாவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்க ஆதரவு தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கம் வரும் 26-ந் தேதி முதல் நாடு தழுவிய போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடிக்கும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவுக்கும் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் (பி.எம்.எஸ்.) பொதுச் செயலாளர் விர்ஜேஷ் உபாத்தியாய எழுதியுள்ள கடிதம்:

சாதாரண மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால், இந்த அரசு மேற்கொண்ட தொழிலாளர் மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தேசிய நலனுக்கு எதிராக உள்ளன. தேசிய வளங்களை தனியார் பெருநிறுவனங்களுக்கு ஒப்படைப்பதாக இந்த அரசு உள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்திய ஆலோசகர்களாலும், பெருநிறுவனங்களுக்குச் சாதகமான அமைச்சர்களாலும் அதிகார மையம் நிரம்பியுள்ளது.
மோடி அரசின் பொருளாதார, தொழிலாளர் சீர்திருத்தங்களை எதிர்த்து, வரும் 26-ந் தேதி முதல் பி.எம்.எஸ். நாடு தழுவிய போராட்டங்களை நடத்தவுள்ளது.
தொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களைத் திரும்ப பெறுவதுடன், பெருநிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்படுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். இந்திய தொழிலாளர் மாநாட்டை உடனடியாக கூட்ட வேண்டும்.
தனியார்மயமாக்கல், தேசியத் தன்மையை உடைப்பது ஆகியவற்றுக்கு அரசு மறைமுகமாக வழி விடுகிறது. அனைத்து இடங்களிலும் தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே கிடைத்துவந்த ஆதாயங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதுபோன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் பி.எம்.எஸ். இயக்கத்தை வீதியில் இறங்கி போராடுமாறு தூண்டுகின்றன.
இவ்வாறு அக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications