விமானப்படை விமானத்திலிருந்து கீழே விழுந்த வெடி குண்டு.. அம்பாலாவில் பரபரப்பு!
இதில் ஒரு குண்டை நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர். இன்னொரு குண்டு வெடிக்க வைக்கப்பட்டது. இதனால் அருகில் உள்ள ஜிடி சாலையில் உள்ள பல வீடுகளின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறின. குண்டு வெடிப்பால் ஏற்பட்ட சிதறல்களால் இந்த ஜன்னல்கள் உடைந்தன.
இது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடந்திருக்கலாம் என்று அம்பாலா காவல்துறை ஆணையர் கூறியுள்ளார். இதுகுறித்து அம்பாலா போலீஸ் கமிஷனர் ராஜ்பீர் தேஸ்வால் கூறுகையில், சோதனை குண்டுவெடிப்பை நடத்தப் போவதாக ஏற்கனவே விமானப்படை அதிகாரிகள் எங்களுக்குத் தகவல் தெரிவித்திருந்தனர். மேலும் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை நாங்களும் கொடுத்திருந்தோம். மேலும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தன.
இன்னொரு இடத்தில் ஒரு விமானப்படை விமானம் கிளம்பத் தயாராக இருந்தது. அப்போது ஒரு குண்டு, விமானத்திலிருந்து கீழே விழுந்து விட்டது. தொழில்நுட்பக் கோளாறு அல்லது தவறுதலாக குண்டு பொருத்தப்பட்டிருந்தது இதற்குக் காரணமாக இருக்கலாம்.
இதுதொடர்பாக வெடிபொருள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். விசாரணை நடந்து வருகிறது. தவறுக்குக் காரணமானவர்களிடம் நாங்கள்
விசாரிக்க முடிவு செய்துள்ளோம்.
இந்த குண்டு வீடு ஏதாவது மீது விழுந்திருந்தால் பேராபத்து ஏற்பட்டிருக்கும் என்றார் அவர்.
இதுகுறித்து விமானப்படை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், டிசம்பர் 11ம் தேதி இரவு 8 மணியளவில் அம்பாலா விமான்படைத் தளத்திலிருந்து பயிற்சி விமானம் கிளம்பி பறந்து கொண்டிருந்தது. அது ஜாகுவார் விமானமாகும். அப்போது விமானத்தில் அவசர நிலை ஏற்பட்டது.
இதையடுத்து விமானத்திலிருந்த குண்டை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் விமானிக்கு ஏற்பட்டது. இதையடுத்து விமானத் தளத்தில் உள்ள பகுதியில் 2000 பவுண்டு எடை கொண்ட இரண்டு குண்டுகளை விமானி, விமானத்திலிருந்து கீழே போட்டார். இதன் மூலம் விமானமும், விமானியும் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
குண்டு கீழே விழுந்ததும் அதை பாதுகாப்பான முறையில் செயலிழக்க வைக்கும் முயற்சிகள் நடந்தன. அதில் ஒரு குண்டு முழுமையாக செயலிழக்க வைக்கப்பட்டது. இன்னொரு குண்டு பாதியளவில் மட்டுமே செயலிழந்தது.
இதையடுத்து அதை வெள்ளிக்கிழமை காலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வெடிக்கச் செய்தோம் என்றனர்.
ஆனால் தவறுதலாக குண்டு விழுந்தது என்ற செய்தியை விமானப்படையினர் மறுத்துள்ளனர். தவறுதலாக குண்டுகள் விழவில்லை. மாறாக, விமானத்தைக் காக்கவே விமானி அந்தக் குண்டுளை கீழே போட்டார் என்று விளக்கப்பட்டுள்ளது.