திருடவில்லை என்பதை நிரூபிக்க கொதிக்கும் எண்ணெயில் கையை விட்ட 4 சிறுவர்கள்.. 3 பேர் கைது
போபால்: மத்திய பிரதேசத்தில் தாங்கள் திருடவில்லை என்பதை நிரூபிக்க நான்கு சிறுவர்கள் கொதிக்கும் எண்ணெயில் கையை விட்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள ஜிலா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பரத் குஸ்வாஹா(13), ஹல்கோட்டி பட்டேல்(12), ஆகாஷ் குஸ்வாஹா(11) மற்றும் ராம்குமார் குஸ்வாஹா(14). அவர்கள் 4 பேரும் சேர்ந்து ரூ.500 ரொக்கத்தை திருடியதாக அதே கிராமத்தைச் சேர்ந்த பகவன்தாஸ் சதார், அவரது மனைவி சஷி, அவரது சகோதரர் லகான் ஆகியோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து லகான் தனது வீட்டுக்கு விருந்து சாப்பிட வருமாறு அந்த 4 சிறுவர்களையும் கடந்த வியாழக்கிழமை மாலை அழைத்து வந்துள்ளார். வீட்டுக்குள் சிறுவர்கள் நுழைந்தவுடன் லகான் குடும்பத்தார் அவர்கள் மீது திருட்டுப் பட்டம் சுமத்தி அவர்களை தாக்கியுள்ளனர். சிறுவர்கள் தாங்கள் பணத்தை திருடவில்லை என்று கூறியுள்ளனர். உடனே லகான் குடும்பத்தார் பணத்தை திருடவில்லை என்றால் கொதிக்கும் எண்ணெயில் கையை விட்டு நிரூபிக்குமாறு சிறுவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
அதற்கு சிறுவர்கள் மறுக்கவே லகான் குடும்பத்தார் அவர்களை கட்டாயப்படுத்தி கொதிக்கும் எண்ணெயில் கையை விடவைத்துள்ளனர். அப்போது ஆகாஷ் மட்டும் தப்பித்து சென்று தனது மற்றும் தனது நண்பர்களின் பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவித்தார்.
இதையடுத்து சிறுவர்களின் பெற்றோரும், கிராமத்தினரும் வந்து சிறுவர்களை மீட்டனர். கொதிக்கும் எண்ணெயில் கையை விட்டதால் சிறுவர்களின் கை வெந்து போயிருந்தது. இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் லகான், சஷி மற்றும் பகவான் தாஸ் சதார் ஆகியோரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications