இந்தியாவை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்கலாம்: இங்கிலாந்து எச்சரிக்கை
டெல்லி: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று இங்கிலாந்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
லண்டனில் இந்தியா- இங்கிலாந்து இடையேயான தீவிரவாதத்திற்கு எதிரான கூட்டு பணிக்குழு கூட்டம் கடந்த 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இங்கிலாந்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று இந்திய அதிகாரிகள் எச்சரித்தனர். இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று இங்கிலாந்து அதிகாரிகள் தங்களின் இந்திய சகாக்களிடம் தெரிவித்தனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளை விட ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதல் நடத்துமோ என்று தான் இங்கிலாந்து அஞ்சுகிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த உளவு அமைப்பான ஐஎஸ்ஐஎஸுக்கும் தொடர்பு உள்ளதால் அது பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளை தாக்குதல் நடத்துவதில் இருந்து தடுக்கலாம் என்று நினைக்கிறது.
மும்பையைச் சேர்ந்த 4 வாலிபர்கள் கடந்த மே மாதம் மாயமானார்கள். அவர்கள் ஈராக், சிரியா சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்தனர். அதில் ஒருவர் கடந்த நவம்பர் மாதம் நாடு திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ட்விட்டர் மூலம் ஆள் சேர்த்த பெங்களூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். மேலும் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய என்ஜினியர் ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர கிளம்பியபோது கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.