வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வெளிநாட்டுக்கு ஓடினாலும் சொத்துக்கள் பறிமுதல் - அருண் ஜெட்லி
வங்கிகளில் கடன் பாக்கி வைத்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வோரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி எச்சரித்துள்ளார்.
டெல்லி: பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு நாட்டைவிட்டு தப்பியோடுபவர்களின் சொத்துக்களை முடக்க புதிய சட்டம் இயற்றப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். 2017 - 18 பொது பட்ஜெட்டை தாக்கல் லோக்சபாவில் தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் இதனை தெரிவித்தார்.
விஜய் மல்லையா போன்ற பணமுதலைகள் நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று விடுகின்றனர். இதனை தடுக்கும் வகையில் நாட்டில் புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து பேசிய அருண் ஜெட்லி, தலைமை தபால் அலுவலகங்களில் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வங்கி கடனை திருப்பி செலுத்தாதவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறினார்.
நிதி நிறுவனங்களை முறைப்படுத்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்று கூறிய அவர், வேளாண் விளை பொருட்களில் முன்பேர வர்த்தகத்தை முறைப்படுத்தவும் புதிய திட்டம் கொண்டு வரப்படும் என்றார்.
இந்தியாவிற்குள் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் நடைமுறை எளிமைபடுத்தப்படும் என்றார். அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியம் ரத்து செய்யப்படும் என்றும் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
வீட்டு வசதி துறை இனி கட்டமைப்பு துறையாக வகைப்படுத்தப்படும் என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார். கட்டமைப்பு துறையை போல வீட்டு வசதி நிறுவனங்களுக்கும் நிதி திரட்ட இதனால் வழி ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
தொழில் உறவு, சமூக பாதுகாப்பு உட்பட 4 பிரிவாக தொழிலாளர் சட்டம் வகைப்படுத்தப்படும் என்றார். தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.