அனைத்து தரப்பினர் எதிர்பார்ப்பும் பட்ஜெட்டில் நிறைவேறும்: அபூர்வ பிரஸ்மீட்டில் ஆசை காட்டிய மோடி
Recommended Video
டெல்லி: அனைத்து தரப்பினர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்விதமாக பட்ஜெட் தாக்கலாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க நாடாளுமன்றம் வந்த பிரதமர் மோடி, நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அனைத்து தரப்பு மக்கள் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும்விதமாக இருக்கும்.
இந்தியா வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளதை புள்ளி விவரங்கள் எடுத்துக்கூறுகின்றன.
நல்ல ரிப்போர்ட்
உலக வங்கி, சர்வதேச நிதியகம் உள்ளிட்ட அமைப்புகளின் ரேட்டிங்கும் இந்தியா முன்னேறியுள்ளதாகவே தெரிவிக்கிறது. இந்தியா மீது உலக நாடுகள் எதிர்பார்ப்பு வைத்துள்ளன. எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் பட்ஜெட்டுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். கட்சிகளைவிட தேசம் உயர்ந்தது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
சிறப்பு பேட்டி
பிரதமர் மோடி கடந்த வாரம் ஆங்கில சேனல் ஒன்றுக்கு சில நிமிடங்கள் பேட்டியளித்தார். அப்போது வேலை வாய்ப்பு குறித்த கேள்விக்கு பக்கோடா விற்றால் கூட பணம் சம்பாதிக்கலாம் என அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அபூர்வ பேட்டி
இன்று சில நிமிடங்கள் அனைத்து மீடியாக்களுடன் உரையாடிவிட்டு நாடாளுமன்றம் சென்றார். அப்போதும் நிருபர்களின் கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளிக்கவில்லை. மன் கி பாத் போன்ற ரேடியோ உரை போன்று பேட்டியளித்துவிட்டு கிளம்பினார் பிரதமர்.
அதிசயம்
மோடி பிரதமரான பிறகு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறவில்லை. விரல் விட்டு எண்ணும் அளவுக்குதான் மோடி நிருபர்களை சந்தித்துள்ளார். பட்ஜெட் குறித்து பிரதமர் கூறிய கருத்துக்கள் மக்களின் ஆசையை தூண்டுவதாக இருந்தாலும், மாத சம்பளதாரர்கள் உள்ளிட்டோரின் எதிர்பார்ப்பை அது நிறைவேற்றுமா என்பதை பிப்ரவரி 1ம் தேதிவரை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.