நிதிஷ்குமார் அரசின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!
பீஹார் மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி டெல்லியையடுத்த காசியாபாத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காசியாபாத் : பீஹார் மாநிலத்தை சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி மனிதர்கள் மீது இருந்த நம்பிக்கை போய்விட்டதால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பீஹார் மாநில முதல்வர் நிதிஷ்குமாரால் சிறந்த நிர்வாகி உணர்ச்சிவசப்படக்கூடிய அதிகாரி என்ற பெயரை பெற்றவர் மூத்த ஐஏஎஸ் அதிகாரி முகேஷ் பாண்டே. பக்சர் மாவட்ட ஆட்சியரைக இருந்த பாண்டே டெல்லி அருகே காசியாபாத் ரயில் நிலையத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த பாண்டே தனது பையில் ஒரு தற்கொலைக்கடிதம் வைத்திருந்துள்ளார். அதில் என்னுடைய சொந்த முடிவில் தற்கொலை செய்து கொள்கிறேன் இதற்கு யாரும் காரணமல்ல என்று எழுதியிருந்ததோடு, விரிவான கடிதத்தை டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதி அறையில் வைத்திருக்கிறேன் என்றும் அவர் எழுதியுள்ளார்.

வெறுப்பு
அவர் தங்கியிருந்த அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட தற்கொலைக் கடிதத்தில் "நான் வாழ்க்கையை வெறுத்துவிட்டேன், மனிதர்கள் மீதான நம்பிக்கை போய்விட்டது. என்னை மன்னித்து விடுங்கள், உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன், என்னை மன்னித்துவிடுங்கள் என்று எழுதியுள்ளார் பான்டே.

தந்தை அதிர்ச்சி
மூத்த ஐஏஎஸ் அதிகாரியின் தற்கொலை அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. செவ்வாய்க்கிழமை பாண்டேவிடம் அவரது தந்தை தொலைபேசியில் பேசியுள்ளார். "என்னுடைய மகன் என்னை நலம் விசாரித்தான், எனக்கு சர்க்கரை வியாதி எப்படி இருக்கிறது என்றும் கேட்டான். ஆனால் திடீரென ஏன் தற்கொலை முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை.

உறவினருக்கு தகவல்
டெல்லியில் ஓட்டலில் தங்கியிருந்த முகேஷ் பாண்டே, நேற்று மதியம் டெல்லியில் உள்ள மால் ஒன்றிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது வாட்ஸ் அப்பில் உறவினர்களுக்கு தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக் கூறியுள்ளார். உடனடியாக அவரது உறவினர்கள் போலீசாரை தொடர்பு கொண்டு இது குறித்து கூறியுள்ளனர், உடனடியாக மாலுக்கு சென்று பார்த்த போது அங்கு அவர் இல்லை.

பிணமாக கண்டெடுப்பு
இதனையடுத்து பாண்டேவின் உறவினர் அவரைக் காணவில்லை என்று போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் ஐஏஎஸ் அதிகாரி மாலில் இருந்து மெட்ரோ ரயில் நிலையம் நோக்கி செல்வது சிசிடிவி காட்சிப் பதிவுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் பாண்டே ரயில்வே டிராக்கில் இருந்து பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

போலீஸ் விசாரணை
2012ம் ஆண்டு பேட்சை சேர்ந்த முகேஷ் பான்டே இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் 14வது இடத்தை பெற்றவர். இவரின் சாதனை பலரிடமும் பாராட்டு பெற்றது போல இவரின் பணியும் அனைவரின் அபிமானத்தையும் பெற்றவர். ஐஏஎஸ் அதிகாரி தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு காரணம் ஏதேனும் இருக்கிறதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications