மோடி, முலாயம், சந்திரசேகர் ராவ் ராஜினாமா செய்த தொகுதிகளில் செப்.13-ல் இடைத்தேர்தல்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் ராஜினாமா செய்த தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 13-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி மற்றும் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா ஆகிய இரு லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டார்.
இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அவர், வாரணாசி எம்.பி. பதவியை தக்க வைத்துக் கொண்டு வதோதரா எம்.பி.பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து, கடந்த 3 மாதங்களாக காலியாக இருந்த வதோதரா தொகுதிக்கும், இதே போல் உத்தரப்பிரதேசத்தில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் ராஜினாமா செய்த மைன்புரி எம்.பி. தொகுதிக்கும், தெலுங்கானாவின் முதல்வர் சந்திரசேகர் ராவ் ராஜினாமா செய்த மேடக் தொகுதிக்கும் சேர்த்து 3 தொகுதிகளுக்கும் வரும் செப்டம்பர் 13-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
இந்த 3 இடைத்தேர்தல்களுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 20-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரையில் நடைபெறும்.
வேட்பு மனுக்கள் பரிசீலனை 28-ந் தேதி நடைபெறுகிறது. 30-ந் தேதி வேட்பு மனுக்களை திரும்பபெற கடைசி நாள்.
3 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும் 13-ந் தேதி நடைபெறும்; வாக்கு எண்ணிக்கை 16-ந் தேதி நடைபெறும்.