சிறுவர்கள் வரைந்த படங்களுடன் இந்தியா-பாகிஸ்தான் நல்லுறவை உணர்த்தும் காலண்டர்
டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் நல்லுறவை உணர்த்தும் விதமாக இரு நாடுகளையும் சேர்ந்த சிறுவர்கள் வரைந்த படங்களுடன் உருவாக்கப்பட்ட காலண்டர் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படுகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தலா 6 வரைப்படங்கள் இந்த காலண்டரில் இடம்பெறுகிறது.
ஆகாஸ்-இ-ஜோஸ்தி என்ற தொண்டு நிறுவனம் இந்தியா பாகிஸ்தான் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, இரு நாடுகளில் உள்ள சிறுவர்கள் வரைந்த படங்களுடன் ஆண்டுதோறும் காலண்டர் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான காலண்டர் வரும் ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் வெளியிடப்படுகிறது. நான்கு நாள்களுக்குப் பிறகு அது பாகிஸ்தானில் வெளியிடப்படும்.
இந்த அமைப்பில் இந்தியாவின் பெங்களுரூ, டேராடூன், மீரட், மும்பை, டெல்லி, ஹைதரபாத், லக்னோ, வதோதரா ஆகிய நகரங்களிலிருந்தும், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி, பெஷாவர் நகரங்களில் உள்ள பல இளைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த காலண்டரில் இடம்பெறுவதற்காக மாணவர்கள் அனுப்பி வரும் வரைப்படங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு 300 சிறுவர்கள் தங்களது படைப்புகளை அனுப்பி உள்ளதாக ஆகாஸ் -இ-ஜோஸ்தி நிறுவனத்தின் தலைவர் ரவி நித்தேஷ் கூறியுள்ளார்.