கர்நாடக வளர்ச்சி திட்டங்கள்... பேப்பர் இல்லாமல் ராகுல்காந்தி பேச தயாரா? மோடி சவால்
பேப்பர் இல்லாமல் 15 நிமிடங்கள் ராகுல் காந்தி பேச தயாரா என்று பிரதமர் நரேந்திர மோடி சவால் விடுத்துள்ளார்.
மைசூரு: கர்நாடக வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேப்பர் இல்லாமல் ராகுல்காந்தி பேச தயாரா என்று பிரதமர் நரேந்திர மோடி சவால் விடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வரும் மே 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் போட்டா போட்டி போடுகின்றன.
15 பொது கூட்டங்களில் 5 நாட்களுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி பெங்களூர் வந்துள்ளார். அவர் சாம்ராஜநகர மாவட்டத்தில் சந்தேமரஹள்ளியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசினார்.
பாஜக புயல்
அவர் பேசுகையில், நான் இங்கு வருவதற்கு முன்னர் கர்நாடகத்தில் பாஜக அலை வீசுவதாக என்னிடம் கூறப்பட்டது. இப்போது நான் இங்கு இருக்கிறேன். நான் உங்களுக்கு ஒன்று கூறிக் கொள்கிறேன். கர்நாடகாவில் பாஜக அலை வீசவில்லை, அது பாஜக புயல் ஆகும்.
முதல்வர் யார்
முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கர்நாடக மக்களின் நம்பிக்கையாவார். இந்த மாநிலத்தின் அடுத்த முதல்வராக அவர் தேர்ந்தெடுக்கப்படுவார். கடந்த 2005-ஆம் ஆண்டு மன்மோகன் சிங், 2009-ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மின்சாரம் கொடுப்பதாக உறுதியளித்தார்.
துண்டு பேப்பர்
அது என்ன ஆயிற்று? மன்மோகன் சிங்கை காங்கிரஸ் எவ்வாறு நடத்தியது என்பதை நாங்கள் பார்த்தோம். 15 நிமிடங்கள் ராகுல் தொடர்ந்து பேசினால் நான் அவரது முன்பு நிற்க முடியாது என்று கூறியுள்ளார். ஆம் அது சரிதான். நீங்கள் பேச மட்டும்தான் செய்வீர்கள். ஆனால் நாங்கள் வேலைக்காரர் ஆயிற்றே. உங்கள் முன்னால் நின்று பேச முடியுமா. நான் ஒரு சவால் விடுகிறேன். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் செய்த சாதனைகளை ஒரு துண்டு பேப்பர் கூட இல்லாமல் ராகுலால் கூறமுடியுமா.
சாதாரண மக்கள்
நீங்கள் இந்தி, ஆங்கிலம், உங்கள் தாய்மொழியான இத்தாலி மொழியில் கூட பட்டியலிடுங்கள். ஆனால் பேப்பரை பார்க்காமல் பேச வேண்டும். கர்நாடகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இல்லை. லோக் ஆயுக்தா பாதுகாப்பாக இல்லை. அப்படியிருக்கும்போது சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு எப்படி கிடைக்கும்.
பல்வேறு திட்டங்கள்
சாம்ராஜநகர் மக்களுக்கு சுகாதாரமான தண்ணீர், வேலைவாய்ப்பு ஏன் கிடைக்கவில்லை. இங்குள்ள மாநில அரசு என்ன செய்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றுவதற்கான செயலில் இறங்கியுள்ளது. மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் கர்நாடக விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர் என்றார் மோடி.