உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது: கர்நாடக எதிர்க்கட்சிகள்
பெங்களூர்: உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்று கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்தில் அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அக்டோபர் 4ம் தேதிக்குள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தமிழகத்திற்கு அடுத்த 7 நாட்களுக்கும் தினமும் 6ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்ட நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் சித்தராமையா இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை பெங்களூரில் கூட்டி ஆலோசனை நடத்தினார்.
எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், மதசார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி, பாஜகவின் ஷோபா கரந்தலாஜே, நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் மற்றும் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கூடாது என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டிய எதிர்க்கட்சிகள், அந்த தீர்மானத்திற்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்க கூடாது என வலியுறுத்தினர். எனவே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மீண்டும் மறுக்கும் என தெரிகிறது.
காவிரி மேலாண்மை வாரியத்திற்கு உறுப்பினர் பெயரை பரிந்துரை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதையும் கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஏற்று செயல்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.