சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரப்புவோர் மீது நடவடிக்கை: பெங்களூரு போலீஸ்
பெங்களூரு: சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தங்களுக்கு வரும் உறுதி செய்யப்படாத தகவல்களை, படங்களை மற்றவருக்கு அனுப்பவும் போலீசார் தடை விதித்துள்ளனர்.
தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டது தொடர்பாக பெங்களூருவில் வெடித்துள்ள வன்முறைச் சம்பவங்கள் விபரீத நிலையை எட்டியுள்ளன. தமிழகப் பதிவெண் கொண்ட வாகனங்களும், தமிழர்களின் கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்படுகின்றன. இதனால், பெங்களூரு முழுவதும் பதற்ற நிலை உண்டாகியுள்ளது.
பெங்களூருவில் பதற்றம் நிறைந்த 16 இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் தமிழக பதிவெண் வாகனங்களும், கார்களும் மற்றும் தனியாருக்கு சொந்தமான பேருந்துகளும் நேற்று வன்முறை கும்பலால் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
பெங்களூருவில் ஒரு இடத்தில் தமிழர் நடத்தும் கடைக்கு தீ வைக்கப்பட்டது. விஜயாநகரில் தமிழகத்தை சேர்ந்த ஒரு கார் கன்னட அமைப்பி்னரால் அடித்து நொறுக்கப்பட்டது. இதனிடையே மைசூருவில் அமைதியை ஏற்படுத்த 5 கம்பெனி துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். மேலும் துணை ராணுவ படையினர் கர்நாடகாவிற்கு விரைந்துள்ளனர். தேவைப்பட்டால் பெங்களூருவிலும் துணை ராணுவப் படையினர் களமிறக்கப்படுவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தங்களுக்கு வரும் உறுதி செய்யப்படாத தகவல்களை, படங்களை மற்றவருக்கு அனுப்பவும் போலீசார் தடை விதித்துள்ளனர். அவசர உதவிக்கு 100 என்ற எண்ணில் அழைக்கலாம் என பெங்களூரு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் 94-80-80-10-00 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.