காவிரி நீர் பிரச்சினை: சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா திருத்தப்பட்ட மனு தாக்கல் செய்ய முடிவு
2000 கனஅடி நீர் திறப்பு உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திருத்தப்பட்ட மனு தாக்கல் செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூரு: காவிரியில், இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு, 2,000 கன அடி வீதம் தண்ணீரை, மறு உத்தரவு வரும் வரை திறந்து விட வேண்டும்' என, கர்நாடக அரசுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீர் திறக்க முடியாத நிலை உள்ளது என அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என, உச்சநீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட மத்திய நீர் ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையிலான உயர் தொழில்நுட்பக் குழு தமிழகம் மற்றும் கர்நாடகாவில், கள ஆய்வு செய்து, 40 பக்க அறிக்கையை, தாக்கல் செய்தது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு கடந்த அக்டோபர் 17ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.என்.கான்வால்கர் ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, காவிரி பாசனப்பகுதிகளில் ஆய்வு செய்த மத்திய உயர்நிலை தொழில்நுட்ப குழுவின் அறிக்கையை தாக்கல் செய்தார்.
அப்போது காவிரியில் எவ்வளவு தண்ணீரை, தமிழகம் மற்றும் கர்நாடகா பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து, நிபுணர் குழு எந்த பரிந்துரையும் அளிக்கவில்லை. அதனால், அக்டோபர் 4ம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, மறு உத்தரவு வரும் வரை, காவிரியில், தமிழகத்திற்கு வினாடிக்கு, 2,000 கன அடி வீதம், கர்நாடகா தண்ணீர் திறந்துவிட வேண்டும். இந்த உத்தரவை, கர்நாடகா மதித்து நிறைவேற்ற வேண்டும். இரு மாநிலங்களிலும், எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல், அமைதி, சட்டம் - ஒழுங்கை பராமரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்ற உத்தரவின் படி கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீர் திறக்க முடியாத நிலை உள்ளது என அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் 2000 கனஅடி நீர் திறப்பு உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திருத்தப்பட்ட மனு தாக்கல் செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.