முன்னாள் பத்திரிக்கையாளர் தற்கொலை செய்தாரா?: விசாரிக்கும் சிபிஐ
முன்னாள் பத்திரிக்கையாளரும், டாடா ஸ்டீல் நிறுவன அதிகாரியுமான சாருதத்தா தேஷ்பாண்டே கடந்த ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி மும்பை வசாய் பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தானாக தற்கொலை செய்யவில்லை என்றும், டாடா ஸ்டீல் நிறுவன அதிகாரிகள் சிலர் அவருக்கு தொடர்ந்து பிரச்சனைகள் கொடுத்து வந்ததால் தான் அவர் தனது வாழ்வை முடித்துக் கொண்டார் என்றும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரபல பத்திரிக்கையில் டாடா ஸ்டீல் நிறுவனம் பற்றி ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அந்த செய்தியில் டாடா நிறுவனத்திற்கு எதிராக சில கருத்துகள் இருந்ததாகவும், அதை தேஷ்பாண்டே தான் கூறியுள்ளதாகவும் நினைத்து அதிகாரிகள் சிலர் அவருக்கு பிரச்சனை கொடுத்து வந்துள்ளனர். இதையடுத்து தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும் டாடா ஸ்டீல் உயர் அதிகாரி ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுமாறு அவரது குடும்பத்தாரும், பத்திரிக்கையாளர்களும் மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீலுக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.