வெடித்தது குட்கா குண்டு: தமிழகம், கர்நாடகா உட்பட 35 இடங்களில் ஒரே நேரத்தில் சிபிஐ ரெய்டு!
குட்கா விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரின் வீடு உட்பட தமிழகம் முழுவதும் 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை: குட்கா விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரின் வீடு உட்பட தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா உட்பட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்ய லஞ்சம் பெற்ற அதிகாரிகள் யார் என்பதைக் கண்டுபிடிக்க சிபிஐ அதிகாரிகள் குட்கா விவகாரத்தில் சிக்கிய மாதவராவிடம் அண்மையில் விசாரணை நடத்தினர்.
மாதவராவிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, அவரது குட்கா குடோனுக்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்தனர். சுமார் 10 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.
யார் யார் லஞ்சம் பெற்றனர்?
அப்போது குட்கா விற்பனைக்காக வழங்கப்பட்ட லஞ்சம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. மேலும், எவ்வளவு காலம் லஞ்சம் கொடுக்கப்பட்டது, எந்த அதிகாரிகள் எவ்வளவு லஞ்சம் வாங்கினார்கள், உடந்தையாக இருந்தது யார்? யார்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
35 இடங்களில் சோதனை
அதற்கு அவர் அளித்துள்ள பதில்களை வீடியோவிலும், எழுத்து மூலமாகவும் பதிவு செய்தனர்.இந்நிலையில் மாதவராவ் தகவலின் அடிப்படையில் தமிழகம், புதுச்சேரி, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்பட 5 மாநிலங்களில் 35 இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது. மத்திய கலால் வரித்துறை கண்காணிப்பாளர்கள் பாண்டியன், சேஷாத்ரி வீடுகளும் ரெய்டுக்குள்ளாகின. விற்பனை வரித்துறை அதிகாரி கணேசன் வீடும் ரெய்டிலிருந்து தப்பவில்லை. குட்கா தயாரிப்பில் ஈடுபட்டு வரும் அண்ணாமலை என்பவரின் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.
அமைச்சர் வீட்டில் ரெய்டு
சென்னையில் உள்ள முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த பல்பொருள் அங்காடி உரிமையாளர் உள்ளிட்டோரின் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
டைரியில் உள்ள பெயர்கள்
குட்கா விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். குட்கா அதிபர் மாதவராவ் டைரியில் உள்ள பெயர்களின் அடிப்படையில் பினாமிகள் பலரின் அலுவலகங்களில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.