மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலுக்கு பிந்தைய கலவரம் .. இதுவரை 9 வழக்குகள் பதிவு செய்தது சிபிஐ
கொல்கத்தா : இந்த மாத தொடக்கத்தில் கொல்கத்தா உயர் நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை அடுத்து, மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பாக ஒன்பது வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) பதிவு செய்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடந்தது. இந்த தேர்தல் முடிவுகள் மே 2ம் தேதி வெளியாகியது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

மே 2 ஆம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்குப் பிறகு மிகப்பெரிய அரசியல் வன்முறை ஏற்பட்டது. கொலை,, கொள்ளை, பலாத்காரம் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தது. இந்த வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் . மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையின் போது பெண்களுக்கு எதிரான கொலைகள், பலாத்காரம் மற்றும் குற்றங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து கொலை, பாலியல் பலாத்காரம் மற்றும் வன்முறையின் போது பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்பான வழக்குகளின் விவரங்களை மேற்கு வங்க காவல்துறை தலைமை இயக்குனருக்கு சிபிஐ கடிதம் அனுப்பி இருந்தது.
அத்துடன் மேற்கு வங்கத்தின் அரசியல் வன்முறையை விசாரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) தலா 4 குழுக்களை இணை இயக்குநர்கள் ராம்நிஷ், அனுராக், வினீத் விநாயக் மற்றும் சம்பத் மீனா தலைமையில் அமைத்து இருந்தது. ஒவ்வொரு குழுவிலும் ஒரு துணை ஆய்வாளர் ஜெனரல் மற்றும் சுமார் நான்கு காவல்துறை கண்காணிப்பாளர்கள் இருப்பார்கள் என்றும் ஒட்டுமொத்த விசாரணையை கூடுதல் இயக்குனர் அஜய் பட்னாகர் கண்காணிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பாக ஒன்பது வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) பதிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் புகார்கள் பதிவு செய்யப்படுவதாகவும், மாநில காவல்துறை அளித்த தகவலின் அடிப்படையில், அதிக வழக்குகள் உரிய நேரத்தில் பதிவு செய்யப்படும் என்றும் சிபிஐ அதிகாரி ஒருவர் கூறினார். இதனிடையே ஆறு வாரங்களுக்குள் வழக்குகள் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications