நடு காட்டில்.. நள்ளிரவில்.. தவழ்ந்து போவது யாரு.. அலறி அடித்து ஓடிய கனகராஜ்.. வைரலாகும் வீடியோ
நடுக்காட்டில் தவழ்ந்து செல்லும் குழந்தையின் வீடியோ வெளியாகி உள்ளது
மூணாறு: நடுகாட்டில்.. நள்ளிரவில்.. தவழ்ந்து போவது பேயா.. ஐயோ.. அம்மா என்று வனத்துறை ஊழியர் ஒருவர் அலறி அடித்து கொண்டு ஓடி ஒளிந்த சம்பவம் இப்போது வெளிவந்துள்ளது.
மூணாறு அருகே கம்பிளி கண்டம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவரது ஒன்றரை வயது பெண் குழந்தை கோகிலா. கடந்த மாதம் 8-ம் தேதி கோகிலாவுக்கு பழனியில் மொட்டை அடித்து விட்டு, ஜீப்பில் குடும்பத்துடன் ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.
ஜீப்பின் பின்பக்க சீட்டில் குழந்தையை வைத்து கொண்டு தாய் உட்கார்ந்திருந்தார். ஊருக்கு போய்வந்த அசதியில் அப்படியே தூங்கிவிட்டார். ராத்திரி நேரம் 10 மணி இருக்கும். ராஜமலை 5 மைல் பாலத்தில் ஜீப் சென்று கொண்டிருந்தது. அப்போது, அம்மாவின் மடியில் இருந்த கோகிலா கீழே தவறி விழுந்துவிட்டாள்.
சிசிடிவி காட்சிகள்
தூங்கி கொண்டிருந்த தாயும், குழந்தை விழுந்ததை கவனிக்கவில்லை, ஜீப் ஓட்டிக் கொண்டிருந்த சதீஷும் குழந்தையை கவனிக்கவில்லை. கீழே விழுந்த குழந்தை, ரோட்டிலேயே தவழ்ந்து செல்கிறாள்.. நடுக்காட்டில், நடு இரவில் குழந்தை சாலையில் விழுந்து தவழ்ந்து செல்வது அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவானது.
கோகிலா
ஏதோ ஊர்ந்து, தவழ்ந்து போகிறதே என்று வனத்துறை ஊழியர் ஒருவர் கவனித்ததில், அது குழந்தை கோகிலா என்று தெரியவந்து, பிறகு மீட்டார். ஆனால், கிட்டத்தட்ட 50 கிலோ மீட்டர் தூரம் வந்த பிறகுதான் குழந்தையை காணோம் என்ற விஷயமே பெற்றோருக்கு தெரிந்தது. இதன்பிறகு மீட்கப்பட்ட குழந்தை பெற்றோரிடமும் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு சம்பந்தப்பட்ட வனத்துறை ஊழியருக்கு பாராட்டுக்களும் குவிந்தன.
ஆட்டோக்காரர்
இப்போது இந்த சம்பவம் நடந்து இவ்வளவு நாள் ஆன நிலையில், அந்தக் குழந்தையை வனத்துறையினர் "பேய்" என்று நினைத்து பயந்து விட்டார்களாம். கடைசியில் ஒரு ஆட்டோக்காரர்தான் வந்து கோகிலாவை ஓடிவந்து காப்பாற்றி இருக்கிறார் என்ற தகவல் இப்போது அம்பலமாகியுள்ளது.
ஐயோ.. பேய்...
இந்த சிசிடிவி காட்சியை போலீஸ் அதிகாரிகள் முழுவதுமாக ஆராய்ந்து இருக்கிறார்கள். நடுராத்திரி.. நடுக்காட்டில்.. குழந்தை தவழ்ந்து வருவதைப் பார்த்ததுமே, வனத்துறை ஊழியர் ஒருவர் பேய் என்று நினைத்து பயந்து துடித்துள்ளார். அப்படியே அலறி அடித்து கொண்டு, அங்கிருந்த செக்-போஸ்ட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டுள்ளார். அந்த நேரம் பார்த்து, கனகராஜ் என்ற ஒரு ஆட்டோக்காரர் அவ்வழியாக போகவும் அவரை உதவிக்கு அழைத்தார் ஊழியர்.
விமர்சனம்
கனகராஜ் வந்தபிறகுதான் இந்த ஊழியருக்கு கொஞ்சம் தைரியம் வந்துள்ளது. அவருடன் சேர்ந்து அதன்பிறகுதான் குழந்தையா, பேயா என்று பயந்தபடியே அதன் அருகில் சென்றனர். கிட்ட போனதும்தான் அது குழந்தை என்று தெரிந்தபிறகே பயம் போனது. அப்போதுகூட கனகராஜ்தான் குழந்தையை தூக்கிக் கொண்டு வந்திருக்கிறார்.. ஊழியர் இல்லை.. இப்படி பயந்தவர்களை எல்லாம் காட்டில் காவலுக்கு போனால் என்னாவது என்ற விமர்சனம் எழுந்து வருகிறது.