பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி ... தமிழகமெங்கும் உற்சாகம்
டெல்லி: தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதனையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல்களில் பட்டாசுகளை வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயங்கள் நடத்த உச்ச நீதிமன்றம் விதித்த தடையால், கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு நடைபெறவில்லை. இதனால் ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பாளர்கள் கவலையடைந்தனர். தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. உண்ணாவிரதம், கடையடைப்பு நடைபெற்றது.
பாரம்பரிய வீர விளையாட்டுகளை காக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதியளித்தார். கடந்த குளிர்கால கூட்டத்தொடரில் சட்டம் கொண்டு வரப்படவில்லை. 2016 பொங்கல் பண்டிகைக்கு நிச்சயம் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அந்த துறை அமைச்சரும், தமிழகத்துக்கு வந்த மத்திய அமைச்சர்களும் வாக்குறுதி அளித்தனர். எனவே அவசர சட்டமோ, சிறப்பு உத்தரவோ பிறப்பித்து ஜல்லிக்கட்டு அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

விலங்குகள் நல வாரியம்
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கியது. மத்திய அரசு சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தியது. அட்டர்னி ஜெனரலின் எதிர்ப்பை தொடர்ந்து, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு தயக்கம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை குழுவினர் 3 முறை டெல்லி சென்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்தனர். இறுதியாக சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று சந்தித்தனர். இவர்களை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அழைத்து சென்றார்.

மத்திய அமைச்சருடன் பேச்சு வார்த்தை
தற்போது நடந்த பேச்சுவார்த்தையின் போது, மத்திய அமைச்சர் தரப்பில், ‘‘ஜல்லிக்கட்டில் முரட்டு காளைகளை களத்தில் நேருக்கு நேர் மோத விடுவீர்களா?'' என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தக் கேள்வியால், அதிர்ச்சியடைந்த குழுவினர், ஜல்லிக்கட்டு வீடியோவை போட்டு காட்டியிருக்கிறார்கள். அதைப் பார்த்தப் பிறகே, அமைச்சரும், மற்றவர்களும் திருப்தி அடைந்தனராம். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடைபெறும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறி வந்தார்.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி
இந்த நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. காட்சிப்படுத்தும் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வாடிவாசல்களில் உற்சாகம்
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்ததை அடுத்து பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாடிவாசல்களில் பட்டாசு வெடித்தனர். அதோடு இனிப்புகளை வழங்கி உற்சாகத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications