காஷ்மீரில் 370-வது பிரிவைத்தான் நீக்கி விட்டீர்களே.. வன்முறை ஒழிந்துவிட்டதா? ஃபரூக் அப்துல்லா கேள்வி
ஸ்ரீநகர்: "காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு தான் தீவிரவாதத்துக்கு காரணம் எனக் கூறி அதை நீக்கினீர்கள்; தற்போது வன்முறை குறைந்துவிட்டதா?" என்று அம்மாநில முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஃபரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஒன்று நடக்கும் வரையில் காஷ்மீரில் வன்முறை நிகழ்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் அவர் கூறினார்.
காஷ்மீரில் ஒரு குறிப்பிட்ட தரப்பு மக்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஃபரூக் அப்துல்லா இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கலைஞர்போல் வருமா? தொழில்நுட்பத்தால் “எஸ்கேப்”ஆன பொன்னியின் செல்வன் -திமுக எம்பி அப்துல்லா விமர்சனம்
தொடரும் தீவிரவாதிகளின் அட்டூழியம்
காஷ்மீரில் அண்மைக்காலமாக தீவிரவாதிகள் குறிப்பிட்ட தரப்பு மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதன்படி, காஷ்மீரில் உள்ள வெளிமாநிலத்தவர்கள், காவல்துறையில் பணிபுரியும் முஸ்லிம்கள், காஷ்மீர் பண்டிட்டுகள் ஆகியோரை குறிவைத்து தீவிரவாதிகள் பயங்கர தாக்குதலை நிகழ்த்தி வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்டு வரும் இந்த தாக்குதலுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உளவுத்துறை எச்சரிக்கை
நேற்று முன்தினம் கூட, பூரண் கிஷன் பட் என்ற காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்தவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலுக்கு 'காஷ்மீர் ஃப்ரீடம் ஃபைட்டர்ஸ்' என்ற பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இது, காஷ்மீரில் இயங்கி வரும் அல் - பதர் என்ற தீவிரவாத இயக்கத்தின் துணை அமைப்பு ஆகும். இதையடுத்து, இந்த தாக்குதலை நிகழ்த்தியவர்களை பாதுகாப்புப் படைகள் தேடி வருகின்றன. இந்த சூழலில், காஷ்மீர் பண்டிட்டுகள் மீதான தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம் இருப்பதாகவும் உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன.
ஃபரூக் அப்துல்லா கேள்வி
இந்நிலையில், குறிப்பிட்ட தரப்பு மக்கள் குறிவைத்து தாக்கப்படும் 'டார்கெட் கில்லிங்' (Target killing) விவகாரம் குறித்து ஃபரூக் அப்துல்லாவிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், "காஷ்மீரில் நடைபெறும் தீவிரவாதத் தாக்குதலுக்கும், வன்முறைக்கும் 370-வது சட்டப்பிரிவுதான் காரணம் என்று மத்திய பாஜக அரசு கூறியது. அதை நீக்கிவிட்டால் காஷ்மீர் அமைதி பூங்காவாக மாறிவிடும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
"வன்முறையை தடுக்க முடியாது"
ஆனால், இன்று காஷ்மீரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? முன்னெப்போதும் இல்லாத வகையில் வன்முறைச் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளன. 370-வது சட்டப்பிரிவை நீக்கி 4 வருடங்கள் ஆகின்றன. பிறகு ஏன் தீவிரவாத தாக்குதலுக்கும், வன்முறைக்கும் மக்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். காஷ்மீரில் வன்முறைக்கு என்றுமே 370-வது சட்டப்பிரிவு காரணமாக இருந்ததில்லை. ஏனெனில், காஷ்மீரை பொறுத்தவரை வெளியில் இருந்துதான் தீவிரவாதம் ஊக்குவிக்கப்படுகிறது. என்றைக்கு காஷ்மீரில் நிலைநாட்டப்படுகிறதோ, அன்றுதான் வன்முறைக்கும், தீவிரவாத தாக்குதலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்" என ஃபரூக் அப்துல்லா கூறினார்.