விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்:ஓபிஎஸ் வலியுறுத்தல்
டெல்லியில் தமிழக விவசாயிகள் மேற்கொண்டுள்ள போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லி: தமிழக விவசாயிகள் 2 வாரங்களாக நடத்தி வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். வர்தா புயல் மற்றும் வறட்சி நிவாரணமாக தமிழக அரசு கேட்ட தொகையை மத்திய அரசு வழங்க முழுமையாக வழங்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நிலவி வரும் கடும் வறட்சியை சமாளிக்கவும், வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்பிற்கு நிவாரணம் வழங்கக்கோரியும் தமிழக அரசு மத்திய அரசிடம் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கேட்டது. ஆனால் மத்திய அரசு 2014 கோடி ரூபாய் மட்டுமே வறட்சி மட்டும் வர்தா புயல் நிவாரணமாக வழங்கியது.
இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசு கேட்ட நிவாரண நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
வார்தா புயலின் பெரும் சேதத்தை தவிர்ப்பதற்கு அ.தி.மு.க. அரசின் சார்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், புயலுக்குப்பின் மேற்கொண்ட விரைவான நிவாரண நடவடிக்கைகளும் பொதுமக்கள் பாராட்டும்படியாக அமைந்தது.
நிவாரண நிதி வழங்க கோரிக்கை
அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, வார்தா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் எடுத்துக்கூறி, வார்தா புயலினால் ஏற்பட்ட பாதிப்பிற்கு நிவாரண நிதியாக ரூ.22 ஆயிரத்து 573 கோடியும், வறட்சி நிவாரண நிதியாக ரூ.39 ஆயிரத்து 565 கோடியும் வழங்கவேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் கோரிக்கை மனு வழங்கினேன்.
மொத்தம் ரூ.2014 கோடி ஒதுக்கீடு
புயலால் பாதிக்கப்பட்ட இடங்களையும், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் மத்திய குழு நேரில் பார்வையிட்டு மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தன. தற்போது, மத்திய அரசு வார்தா புயல் நிவாரண நிதியாக ரூ.266.17 கோடியும், வறட்சி நிவாரண நிதியாக ரூ.1,748.28 கோடியும் ஆக மொத்தம் ரூ.2 ஆயிரத்து 14 கோடியே 45 லட்சத்தை நிவாரணமாக ஒதுக்கியுள்ளது.
கர்நாடகா வஞ்சித்து வருகிறது
மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை என்பதே அனைத்து தரப்பினரின் கருத்தாகும். விவசாயிகளின் துயர் முழுமையாக நீங்கிட மத்திய அரசிடம் அ.தி.மு.க. அரசு கோரிய நிதியை முழுமையாக வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடச்செய்து, தமிழகத்திற்கான காவிரி நீரை உறுதிசெய்து, நமது உரிமையை ஜெயலலிதா நிலைநாட்டினார். ஆண்டுதோறும் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடாமல் வஞ்சித்து வருகிறது.
தமிழக விவசாயிகள் அச்சம்
காவிரியில் இருந்து ஜூலை 11-ந் தேதி வரை நாள்தோறும் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும், இந்த வருடமும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது சாத்தியமற்றது என கர்நாடக அரசு மீண்டும் தெரிவித்துள்ளது ஏற்புடையதல்ல.
கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு தமிழக டெல்டா விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளதோடு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கேரள, கர்நாடக, ஆந்திர அரசுகளின் தடுப்பணைகளை கட்டும் முயற்சிகளால் தமிழக விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
கோரிக்கைகளை ஏற்க வேண்டும்
இந்த ஆண்டு தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் பொய்த்து போனதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. அரசு கோரிய நிதியை முழுமையாக வழங்கவேண்டி, மத்திய அரசை வலியுறுத்தி கடந்த 2 வாரங்களாக தமிழக விவசாயிகள் டெல்லியில் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளையும், போராட்டத்தினையும் முடிவுக்கு கொண்டுவர துரித நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.