வெங்காய விலை உயர்வு... மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
டெல்லி: வெங்காய விலை சந்தையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு வியாபாரிகள் செயற்கையாக ஏற்படுத்தியுள்ள பற்றாக்குறையால்தான் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இந்த விலை உயர்வை தடுக்க ஏற்றுமதிக்கு தடைவிதித்ததோடு அதிக அளவு வெளி நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது.

இதனால் சில வாரங்களாக குறைந்த வெங்காயத்தின் விலை மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. எனவே அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் சந்தைகளில் வியாபாரிகள் அல்லது இடைத்தரகர்கள் தற்போதுள்ள சாதாரண பற்றாக்குறையைப் பயன்படுத்தி வெங்காயத்துக்கு அதிக விலை நிர்ணயம் செய்கின்றனரா என்பதை ஆராய்ந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம், மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், வெங்காயம் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிர அரசு, போதுமான அளவு வெங்காயம் சந்தைகளுக்கு அனுப்பப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் முதலே மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை சந்தைகளில் வெங்காயத்தின் விலை அதிகமாக உள்ளது. இந்நிலையில் வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். அவர்கள் வெங்காயத்தை பதுக்கிவிட்டு செயற்கையாக கூறுகின்றனரா என்று ஆராய சொல்கிறது மத்திய அரசு.
இ.கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு
இந்நிலையில், வெங்காய விலை ஏற்றதிற்கு காரணமான பெரிய வணிகர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். அத்தியாவசப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாகவும் டி.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
அரசிடம் 27 லட்சம் டன் வெங்காயம் கையிருப்பில் இருந்த நிலையில் அது இப்போது பெருமளவு தீர்ந்து விட்டதாகவும் 3 முதல் 4 லட்சம் டன்கள் மட்டுமே இப்போது கையிருப்பில் உள்ளதாகவும் அரசின் அறிக்கை கூறுகிறது.












Click it and Unblock the Notifications