விவசாயிகளுக்கு அடுத்த நெருக்கடி.. டிராக்டர்களை காணாமல் போக செய்யப் போகிறது மத்திய அரசு!
டிராக்டர்களுக்கும் வணிக வாகனங்களைப் போல சாலை வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
டெல்லி: விவசாயிகள் பயன்படுத்தி வரும் டிராக்டர்களை வணிக வாகனமாக மாற்றி ஆண்டுக்கு ரூ650 சாலை கட்டணம் செலுத்த மத்திய அரசு விரைவில் உத்தரவிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டிராக்டர்கள் விவசாய வாகனங்கள் பிரிவில்தான் இருந்து வருகின்றன. ஜிஎஸ்டி வரி விதிப்பிலும் கூட விவசாய பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இதில் டிராக்டருக்கும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்திலும் டிராக்டர்கள் பெரும்பாலும் விவசாய வாகனமாக பதிவு செய்யப்பட்டு வரி விலக்கைப் பெற்றுள்ளன. ஆனால் இப்போது டிராக்டர்களை வணிக வாகனமாக மாற்ற இருக்கிறது மத்திய அரசு.
டிராக்டர்களில் மணல், ஜல்லி எடுத்துச் செல்வதால் வணிக வாகனம் என மாற்றப் போகிறதாம் மத்திய அரசு. இதனால் தற்போது சாலை கட்டணமாக ஆண்டுக்கு ரூ50 செலுத்தி வந்த நிலையில் இனி ரூ650 செலுத்த நேரிடும்.
மத்திய அரசு இதற்கான உத்தரவை விரைவில் வெளியிட இருக்கிறது. இதற்கு விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.