வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்- சி.பி.ஐ கோரிக்கை
டெல்லி: மத்திய அரசு தமிழகத்தின் மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ஒதுக்கியுள்ள 940 கோடி நிவாரணப் பணிகளுக்கு போதிய அளவில் இல்லை என்றும், இதனை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க இருப்பதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய அக்கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, "தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகளவிலான சேதங்களை ஏற்படுத்திச் சென்றுள்ளது.
மக்கள் இம்மழை வெள்ளத்தால் உடைமைகள், வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இயற்கை சீற்றம் மக்களின் வாழ்வாதாரத்தினையே புரட்டிப் போட்டுள்ளது.
மத்திய அரசின் கவனம் தேவை:
இந்நேரத்தில் மத்திய அரசின் கவனம் தமிழகத்தின் மீது படிந்தே ஆக வேண்டும். கிட்டதட்ட 200க்கும் மேற்பட்ட மக்கள் இந்த வெள்ளத்தால் உயிரிழந்துள்ளனர்.
நீரில் தத்தளிக்கும் தமிழகம்:
பயிர்கள், விளை நிலங்கள், கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள் சேதம் என தமிழகமே நீரில் தத்தளித்து வருகின்றது.அதனால், மத்தியில் இருந்து அதிகளவிலான உதவிகள் கிடைக்கப்பெற வேண்டியது தமிழகத்திற்கு அவசியம்.
அதிக நிவாரணம் தேவை:
மோடி தலைமையிலான அரசு மிக விரைவாக அதிகளவிலான நிவாரணத் தொகையினை மாநில அரசிற்கு வழங்க வேண்டும். இதுகுறித்த விவாதத்தினை நாங்கள் நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்" என்று தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஒதுக்கீடு:
தமிழகத்தினை புரட்டிப் போட்ட மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, ரூ.940 கோடி நிவாரணத் தொகையை ஒதுக்கியது மத்திய அரசு. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வருகின்ற 26ம் தேதி முதல் துவங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.