என் சடலத்தை தாண்டிதான் குடியுரிமை சட்ட திருத்தத்தை மே.வங்கத்தில் அமல்படுத்த முடியும்: மமதா ஆவேசம்
Recommended Video
கொல்கத்தா: தாம் உயிருடன் இருக்கும்வரை மேற்கு வங்க மாநிலத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்தவிடமாட்டேன் என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக கொல்கத்தாவில் மிக பிரமாண்ட பேரணியை இன்று மமதா பானர்ஜி நடத்தினார். இப்பேரணியில் மமதா பானர்ஜி பேசியதாவது:

நான் உயிருடன் இருக்கும் வரை குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்தமாட்டோம். அவர்கள் விரும்பினால் என் அரசை கலைக்கட்டும்.
நாங்கள் ஒருபோதும் சரணடையமாட்டோம். என்னுடைய சடலத்தை தாண்டிதான் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு அவர்களால் இங்கே அமல்படுத்த முடியும்.
தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைக்கு எதிராக நாங்கள் குரல் கொடுத்த போது தனித்து இருந்தோம். இப்போது பிற மாநில முதல்வர்களும் இதனை பேசுகின்றனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் இதை அமல்படுத்தமாட்டோம் என்கிறார். பீகார் முதல்வரும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை அமல்படுத்தமட்டோம் என்கிறார். குடியுரிமை சட்ட திருத்தத்தையும் நீங்கள் அமல்படுத்தாதீர்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
மத்திய பிரதேசம், பஞ்சாப், சத்தீஸ்கர், கேரளா முதல்வர்களும் இப்போது குடியுரிமை சட்ட திருத்ததை ஏற்க முடியாது என கூறிவிட்டனர். இந்தியா என்பது அனைவருக்குமானது.
குடியுரிமை சட்ட திருத்தம் யாருக்கானது? இங்கே நாம் அனைவருமே குடிமக்கள்தான். இந்த இரண்டையும் திரும்பப் பெறும்வரை எங்களது போராட்டம் தொடரும். இவ்வாறு மமதா பானர்ஜி பேசினார்.












Click it and Unblock the Notifications