மோடியை விமர்சனம் செய்வது மட்டுமே போதுமா? 'காங். தலைவர்' ராகுல் காந்திக்கு இனிதான் இருக்கிறது சவால்
Recommended Video
டெல்லி: காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை தலைவராக தேர்ந்தெடுத்து பட்டாபிஷேகம் செய்ய நாள் குறித்தாகிவிட்டது. இன்றைய காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அதற்கான ஒப்புதலை பெற்றாகிவிட்டது.
சோனியாகாந்தி வகித்து வந்த இந்த பதவியை ராகுலுக்கு விட்டுத்தர ரொம்பவே இழுத்தடிப்பு இருந்தது. ராகுல் காந்தி ஒரு பழுத்த அரசியல்வாதி என்ற அங்கீகாரத்தை மக்களிடம் பெற வேண்டுமே என்ற தயக்கமே சோனியாவை தாமதிக்க செய்திருக்க வேண்டும்.
பல்வேறு புனைப்பெயர்களால் ராகுல் காந்தி விமர்சனத்திற்கு உள்ளாகிவந்ததை ஒரு தாய் என்பதை தாண்டி காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் சோனியா காந்தி கண்டிப்பாக பரிசீலனையில் எடுத்திருப்பார். ஆனால் இப்போது காலப்போக்கு சற்று மாறியுள்ளது.
சோஷியல் மீடியாவில் அசத்தல்
சமீப காலங்களில் ராகுல் காந்தியின் சோஷியல் மீடியா கணக்குகள் கவனம் ஈர்க்கின்றன. வேறு யாரோ ராகுல் காந்தி டிவிட்டர் கணக்கை இயக்குகிறார்கள் என்று ஆச்சரியத்தோடும், சற்று பொறாமையோடும் பாஜக தலைவர்கள் விமர்சனம் வைக்கும் அளவுக்கு அவரின் சோஷியல் மீடியா பங்களிப்பு பெருகிவிட்டது. பாஜகவுக்கு பல கிடுக்கிப்பிடி கேள்விகளை அவர் முன் வைக்கிறார்.
பொருளாதார விவகாரம்
பொருளாதார சரிவு, பண மதிப்பிழப்பு, வேலை வாய்ப்பு உருவாக்கம் போன்ற அத்தியாவசிய பிரச்சினைகளை ராகுல் காந்தி கையில் எடுத்து சரமாரியாக கேள்விகளை தொடுக்கிறார். இயல்பாக ஆட்சியின் மீது அதிருப்தியிலுள்ள மக்களுக்கு இந்த கருத்துக்கள் இன்னும் வெறியூட்டுகின்றன. ஆனால் இது மட்டுமே காங்கிரசை கட்டியாள போதுமா, அடுத்த பிரதமர் பதவி வேட்பாளராக அக்கட்சி ராகுலை முன்னிறுத்த மோடியை விமர்சனம் செய்து பெறும் கை தட்டல் போதுமா?
விமர்சனம் மட்டுமே போதுமா?
விமர்சனங்களை சரியாக முன் வைக்கிறார் என்ற பாராட்டை தாண்டி ராகுல் காந்திக்கு இனிதான் உண்மையான சவால் காத்திருக்கிறது. லோக்சபா தேர்தல் நெருங்கும் 2019 கால கட்டத்திற்குள் இப்போதைய பொருளாதார நிலை சீரடைந்து முன்பைவிட வளர்ச்சி பாதைக்கு இந்திய பொருளாதாரம் திரும்பும் என்பது சில பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு. அப்படி நடந்தால் அதை பாஜக தனது அரசியல் மைலேஜுக்கு பயன்படுத்தும். காங்கிரசின் இத்தனை நாள் விமர்சனங்கள் புஸ்வானமாகிவிடும்.
ராகுல் காந்தி ஆயுதம்
பொருளாதார குற்றச்சாட்டுகளை தாண்டி காங்கிரசிடம் வலுவான ஆயுதம் தேவை. அதை ராகுல் காந்தி ரெடி செய்ய வேண்டும். அவ்வப்போதைய மக்களின் பிரச்சினைகளை ராகுல் இனம் கண்டு கையில் எடுத்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதுவரை அதை சரியாக செய்யாத ராகுல் காந்தி இனி அதை மிகச்சரியாக செய்தாக வேண்டிய நிலை உள்ளது. முக்கியமாக, பிரச்சினைகளுக்கான தீர்வையும் ராகுல் காந்தி சொல்லியாக வேண்டும். வெற்றி விமர்சனம் வாக்குகளாக மாறாது.
கோஷ்டி சண்டை
பல மாநிலங்களில், பாஜகவிடம் அடிமட்டத்தில் பலமான வேர் உள்ளது. போதாத குறைக்கு, வலுவான கிளைகளை கொண்ட, தேர்தல் பணிகளை அர்ப்பணிப்புடன் செய்ய கூடிய அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் உள்ளனர், மாணவர்களை ஒருங்கிணைக்க ஏபிவிபி அமைப்பு பலமாக உள்ளது. ஆனால் இந்த அர்ப்பணிப்பு காங்கிரசின் அடி மட்டத்தில் உள்ளதா? பெரும்பாலான மாநிலங்களில் அது இல்லை. உட்கட்சி பூசல் உச்சத்தில் உள்ளது.
வலுவான கூட்டணி
மோடி தலைமையிலான பாஜகவை எதிர்கொள்ள வலுவான எதிர்க்கட்சிகளின் கூட்டு தேவை. தங்கள் தனிப்பட்ட ஈகோக்களை விட்டு விட்டு எதிர்க்கட்சிகள் காங்கிரசின்கீழே ஒன்றிணைய வேண்டும். அதை ராகுல் காந்தி செய்ய வேண்டும். நினைத்தாலே மலைப்பை ஏற்படுத்தும் இந்த வேலையை ராகுல் காந்தி செய்யாவிட்டால், உத்தர பிரதேசத்தில் எதிர்க்கட்சிகள் பிரிந்து நின்று, பாஜகவை அமோக வெற்றிபெறச் செய்த நிலை 2019ல் மீண்டும் திரும்பும்.