100 ரூபாய் திருடியவருக்கு 8 ஆண்டு சிறை.. நீதிமன்றத்திலேயே கதறி அழுத குற்றவாளி
100 ரூபாய் திருடிய காரணத்திற்காக சண்டிகரை சேர்ந்த ஒருவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.
சண்டிகர்: சட்ட திட்டங்களை பொறுத்த வரை இந்தியா கொஞ்சம் மனித நேயத்துடன் செயல்படுவது வழக்கம். உலக நாடுகள் வாரம் ஒருவரை தூக்கில் போடும் போது இந்தியா மனித உரிமைக்கு குரல் கொடுக்கும்.
அதே சமயத்தில் மோசமான குற்றம் செய்பவர்களை தண்டிக்கவும் நீதிமன்றங்கள் தவறியதில்லை. இந்த நிலையில் சண்டிகரில் இருக்கும் மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் முக்கிய தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டு இருக்கிறது.
21 வயது இளைஞர் ஒருவருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் செய்து குற்றம் 100 ரூபாய் உள்ள பர்ஸை திருடியது.
போலீஸ்
சில நாட்களுக்கு முன் சண்டிகரில் இருக்கும் போலீஸ் நிலையம் ஒன்றிற்கு இரவு 12.30க்கு கால் ஒன்று வந்துள்ளது. போனில் பேசிய ஆட்டோ டிரைவர் ஒருவர் தன்னுடைய பர்ஸை வழிப்பறி கொள்ளையர்கள் மூன்று பேர் பிடுங்கி கொண்டு சென்று விட்டதாக கூறியுள்ளார். அவர் சொன்ன அடையாளத்தை வைத்து போலீஸ் துருவ் நெஹி என்பவரை கைது செய்தது.
8 ஆண்டு
அவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார். அந்த ஆட்டோ டிரைவரும் அவரை அடையாளம் காட்டினார். இதனால் நெஹிக்கு ஐபிசி 397 பிரிவின் கீழ் 8 ஆண்டுகள் சிறையும், 3000 ஆயிரம் ரூபாய் அபராதமும் நீதிபதி விதித்தார். உடனைடியாக நெஹியை சிறையில் அடைக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.
கண்ணீர்
இந்த தீர்ப்பை கேட்டதும் நெஹி அங்கேயே கதறி அழுதுள்ளார். எனக்கு 21 வயதுதான் ஆகிறது, குடும்பத்தை நான்தான் பார்க்க வேண்டும். அப்பா இல்லை. குடும்பம் மிகவும் வறுமையில் இருப்பதால் திருடிவிட்டேன் என்று அழுதுள்ளார். என்னை மன்னித்துவிடுங்கள் என்றும் கெஞ்சியுள்ளார்.
கருத்து
ஆனால் நீதிபதி கோபமாக பதில் அளித்துள்ளார். நீங்கள் எல்லாம் இருப்பதால்தான் மக்கள் ரோட்டில் இறங்கி சரியாக நடக்க முடியவில்லை. தண்டனை வழங்கப்பட்டால்தான் குற்றவாளிகள் திருந்துவார்கள் என்றார். நெஹியுடன் கொள்ளையடித்த இரண்டு பேரும் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்கள் 18 வயதிற்கும் குறைவானவர்கள்.