ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து விவகாரம்... முறிகிறதா பாஜக - தெலுங்கு தேசம் கூட்டணி?
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து தர முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்ட நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற தெலுங்குதேசம் கட்சி முடிவு செய்துள்ளது.
அமராவதி : ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து தர முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்ட நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற தெலுங்குதேசம் கட்சி முடிவு செய்துள்ளது. அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 2 மத்திய அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநில பிரிவினை மசோதாவில் பிரிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்துக்கு 6 அம்ச திட்டத்தின் அடிப்படையில் சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 20.6.2014-ல் மாநிலங்களவையில் அறிவித்தார். நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜகவும் சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை சிறப்பு அந்தஸ்து வழக்கப்படவில்லை.
இந்த நிலையில் 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மத்தியில் பா.ஜ.க.வும் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் ஆட்சியைப் பிடித்தன. பா.ஜ.க.வும், தெலுங்கு தேசமும் கூட்டணி கட்சிகள் என்பதால், ஆந்திரா மாநிலத்துக்கு உடனடியாக சிறப்பு அந்தஸ்து கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
சந்திரபாபு நாயுடு கோரிக்கை நிராகரிப்பு
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி சந்திரபாபு நாயுடு பல முறை டெல்லி சென்று இது தொடர்பாக வலியுறுத்தியுள்ளார். ஆனால் எந்த பலனும் இல்லை. நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து ஆந்திர எம்.பிகள் சிறப்பு அந்தஸ்து கோரி புயலை கிளப்பி வருகின்றனர்.
கைவிரித்த மத்திய அரசு
ஆனால் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து தர இயலாது என்ற மத்திய நிதி அமைச்சகம் நேற்று சூசகமாக தெரிவித்தது. மத்திய அரசின் இந்த முடிவு சந்திரபாபு நாயுடுவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் அமைச்சர்கள் ராஜினாமா
இதனால் மத்திய அரசுக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக முதற்கட்டமாக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் எம்பிகள் அசோக் கஜபதி ராஜு, ஒய்.எஸ்.சவுத்திரி ஆகிய இருவரையும் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
கூட்டணியை முறித்துக் கொள்ள முடிவு
விரைவில் இந்த அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் அளிப்பார்கள் என்று தெரிகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் கட்சி பிரிவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது.