வீடியோ :சத்தீஸ்கரில் வேகமாக வந்த கார்.. தூக்கி வீசப்பட்ட மக்கள்..நிறுத்தாமல் கொடூரம் செய்த ஓட்டுநர்
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் ஜாஷ்பூர் என்ற ஊரில் தசரா பண்டிகையை ஒட்டி ஊர்வலமாக சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
நாடு முழுவதும் தசரா பண்டிகை 10 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் இந்த 10 நாட்களுமே விடுமுறை அளித்து கொண்டாடப்படுகிறது. விழாவின் முக்கிய நாளான விஜயதசமி பண்டிகை மிக உற்சாகமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜாஷ்பூரில் தசரா பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஜாஷ்பூர் என்ற ஊரில் தசரா பண்டிகையை ஒட்டி ஊர்வலமாக மக்கள் சென்று கொண்டிருந்தனர்.

பக்தர் உயிரிழப்பு
அப்போது ஏராளமான மக்கள் ஊர்வலமாக செல்வதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அதிவேகமாக காரை ஓட்டிவந்த நபர், சரமாரியாக ஊர்வலத்தில் சென்றவர்களை மோதி தள்ளினார். இந்த கோர சம்பவத்தில் நிகழ்விடத்திலேயே ஒரு பக்தர் உயிரிழந்தார். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

கஞ்சா கும்பல்
இதனிடையே படுகாயம் அடைந்தவர்களில் 4 பேர் மிக மோசமான உயிருக்கு ஆபத்தான சூழலில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தில் கிலோ கணக்கில் கஞ்சா பொட்டலங்கள் கண்டறியப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. போதை கடத்தல் கும்பல் இந்த கொடூரத்தை நிகழ்த்தி இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருவர் கைது
தசரா பண்டிகையில் பக்தர்கள் மீது காரை ஏற்றி விபத்து ஏற்படுத்திய இருவரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கைது செய்யப்பட்ட இருவர் யார் என்ற விவரமும் தெரியவந்துள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த பபுல் விஷ்வகர்மா, ஷிசுபால் சாகு ஆகியோர் தான் காரை ஏற்றி மக்களை கொன்றவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

அதிர்ச்சி
இதனிடைய தசரா பண்டிகை ஊர்வலத்தில் கார் ஏற்றி மக்கள் கொல்லப்பட்ட ட்விட்டர் உள்பட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்துள்ளது. சத்தீஸ்கரில் ஈவு இரக்கமின்றி மனிதர்களை காரை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் இந்தியா முழுவதுமே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications