நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கில் மன்மோகன்சிங்கை ஏன் விசாரிக்கவில்லை? சிபிஐக்கு சிறப்பு கோர்ட் கேள்வி
டெல்லி: நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் முன்ன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சிபிஐ விசாரணை நடத்தாதது ஏன்? என்று டெல்லி சிறப்பு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கில் தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லா மற்றும் முன்னாள் நிலக்கரிச் செயலர் பரக் மற்றும் சிலர் மீதான வழக்கை முடித்து கொள்வதான அறிக்கையை கடந்த ஆகஸ்ட் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ சமர்ப்பித்திருந்தது.
இந்த வழக்கை அவசரமாக முடிக்க வேண்டிய அவசியம் என்ன என்று சிபிஐயிடம் சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே கேள்விகளை எழுப்பியிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் அத்துறை சார்ந்த முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டதா?
இந்த விவகாரத்தில் நிலக்கரித் துறை அமைச்சரிடம் விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என சிபிஐ கருதாதது ஏன்? இந்த ஊழல் தொடர்பாக தெளிவான ஒரு நிலை ஏற்பட முன்னாள் அமைச்சரிடம் விசாரணை நடத்தப்படுவது அவசியம் என சிபிஐ ஏன் உணரவில்லை?
முன்னாள் பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதா? என சரமாரிக் கேள்விகளை எழுப்பினர்.
2005ஆம் ஆண்டு குமாரமங்கலம் பிர்லாவின் நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்ட போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வசம்தான் நிலக்கரிச் சுரங்க துறை இருந்தது. ஆனால் மன்மோகன் சிங் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கேள்விகளை முன்வைத்துள்ளது.
நீதிமன்றக் கேள்விகளுக்கு பதிலளித்த சிபிஐ விசாரணை அதிகாரி, பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அனுமதிக்கப்பட்டதேதவிர பிரதமரிடம் விசாரணை மேற்கொள்ள எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றார்.
மேலும் வழக்கின் விசாரணைக் குறிப்பை சீலிடப்பட்ட உறையில் போட்டு நீதிமன்றத்த்தில் சமர்ப்பிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.