செமையாக சிக்குகிறார்கள்.. சித்தராமையா, 28 அமைச்சர்கள் மீது மிகப் பெரிய ஊழல் புகார்
பெங்களூர்: காவல்துறை பணியிட மாற்றத்தில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக, லோக்ஆயுக்தாவில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது, கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக காவல்துறை மகாசங்கம் என்ற பெயரில் அமைப்பை நடத்தி வரும் சசிதர் வேணுகோபால், லோக்ஆயுக்தாவில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், போலீஸ் அதிகாரிகள் அமைச்சர்களுக்கு பணம் கொடுத்து தேவைப்படும் இடங்களுக்கு பணியிடமாற்றம் செய்துகொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
28 அமைச்சர்கள் பெயர்களையும் பட்டியலில் குறிப்பிட்டுள்ளார் சசிதர். 21 போலீஸ் அதிகாரிகள் பெயரையும் புகார் பட்டியலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் ஜூன் மாதம், கர்நாடக காவல்துறையை ஸ்டிரைக் செய்ய தூண்டிய குற்றத்திற்காக சசிதரை தேச துரோக வழக்கில் போலீசார் கைது செய்தனர். கர்நாடக ஹைகோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாமா, அதற்கான முதல்கட்ட ஆதாரங்கள் உள்ளனவா என்பது குறித்து லோக்ஆயுக்தா பரிசீலித்து வருகிறது.
அடுத்த வருடம் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள உள்ள கர்நாடகாவில் இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.