மத்திய அமைச்சர் முண்டேவின் மரணம் நாட்டிற்கு பேரிழப்பு... ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
டெல்லி: மத்திய அமைச்சர் முண்டேவின் மறைவிற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரான கோபிநாத் முண்டே, இன்றி காலை டெல்லியில் காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். உடனடியாக சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட முண்டேவுக்கு, திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் உயிர் பிரிந்தது.
கோபிநாத் முண்டேவின் இறுதிச் சடங்கு அவரது சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள லட்டூரில் நாளை நடைபெறும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இரங்கல்:
கோபிநாத் முண்டே காலமானதற்கு ஜனாதிபதி பிரணப் முகர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி
முண்டேவின் மரணத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி கூறியிருப்பதாவது:
முண்டேவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துக்க நேரத்தில் அவர்களுடன் நாங்கள் நிற்கிறோம்.
ஒரு வலிமையான தலைவரின் அகால மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய இடத்தை வேறு யாரும் சமன் செய்ய முடியாது. முண்டே மரணம் நாட்டிற்கு ஒரு பேரிழப்பு" எனத் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநில முதல்வர் சந்திர சேகர ராவ் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலரும் முண்டே மறைவுக்கு தங்களது இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.
திக்விஜய்சிங் இரங்கல்:
நல்ல நண்பரும், மிகச் சிறந்த தலைவருமான முண்டேவின் மரணம் அதிர்ச்சியளிப்பதாகவும், அன்னாரது குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார் காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங்.
அப்துல்கலாம் இரங்கல்:
அதேபோல், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘முண்டேவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.