மோடியை எதிர்க்க துடிக்கும் சக்திகள் ஒன்றிணைந்து லோக்சபா தேர்தலை சந்திக்க வேண்டும்.. சோனியா அழைப்பு
மோடியை எதிர்க்க துடிக்கும் சக்திகள் ஒன்றிணைந்து லோக்சபா தேர்தலை சந்திக்க வேண்டும் என்று சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லி: பாஜக அரசு மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கக் கூடாது என்று நினைக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து லோக்சபா தேர்தலை சந்திக்க வேண்டும் என்று சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியின் பதவிக்காலம் வரும் 2019-ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது. சாமானிய மக்களுக்கு நலன் தராத பட்ஜெட் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் தேர்தல் நேரத்தில் மோடி கூறிய வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

வேலைவாய்ப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி பக்கோடா விற்பது குறித்து பேசிய கருத்து இளைஞர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி மன்றக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சோனியா காந்தி பேசும்போது, வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைவருடனும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்களுடனும் பணியாற்றுவேன். மோடிக்கு எதிராக மனநிலையில் உள்ள கட்சிகள் ஒன்று திரண்டு தேர்தலை சந்திக்க வேண்டும்.
இதுபோல் நாம் ஒன்றிணைவதால் பாஜக தோற்கடிக்கப்பட்டு காங்கிரஸ் ஆட்சி ஏற்படுமேயானால் ஜனநாயக, மதசார்ப்பற்ற, சகிப்புதன்மை, பொருளாதார வளர்ச்சி ஆகியவையுள்ள இந்தியாவாக நம் நாடு மீட்டெடுக்கப்படும். எனவே அணி திரளுவோம். தேசிய ஜனநாயக கூட்டணியை தோற்கடிப்போம் என்றார்.
காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி 1, 2004 ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரையும், ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி -2, 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையும் மத்தியில் ஆட்சி செய்தது. அதுபோல் 2019- 2023-ஆம் ஆண்டு வரை மத்தியில் ஆட்சி அமைக்க ஜனநாயக முற்போக்கு கூட்டணி-3ஐ உருவாக்க சோனியா திட்டமிட்டிருப்பது தெரிகிறது.












Click it and Unblock the Notifications