காஷ்மீர்.. 3 கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க உரிமை கோரிய சில நிமிடங்களில் சட்டசபை கலைப்பு
ஸ்ரீநகர்: மெகபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா கட்சியினர் காங்கிரசுடன் இணைந்து ஜம்மு காஷ்மீரில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரிய பிறகு சட்டசபையை கலைக்க ஆளுநர் பரிந்துரைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி), பாஜக கூட்டணி அமைத்து 2015 மார்ச் மாதம் ஆட்சி அமைத்தன. மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் முப்தி முகம்மது சயீத் முதல்வராகவும் பாஜகவின், நிர்மல் சிங் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர்.
முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி - பாஜக கூட்டணி ஆட்சி தொடர்ந்தது. ஆனால், கருத்து மோதல் காரணமாக, கடந்தஜூன் மாதம் 16ஆம் தேதி, கூட்டணி அரசில் இருந்து பாஜக விலகியது. இதையடுத்து முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார். அதன்பின்னர் எந்த கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராததால் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
ஆட்சி முயற்சி
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாஜக அல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கின. மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி ஆகியவற்றுடன் மெகா கூட்டணி அமைப்பதற்கு காங்கிரஸ் தலைமை ஒப்புக்கொண்டதாக, இன்று காலை முதல் தகவல்கள் வெளியாகின.
பாஜகவிற்கு பின்னடைவு
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில், பாஜகவிற்கு செக் வைப்பதற்காக காங்கிரஸ் இந்த திட்டத்தை கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான முடிவு இன்று இரவு அகாரப்பூர்வமாக வெளியானது. மூன்று கட்சிகள் சார்பிலும், தங்களிடம் உறுப்பினர் பலம் இருப்பதாக கூட்டாக ஆளுநர் எஸ்.பி.மாலிக்கிடம் இன்று இரவு கடிதம் அளித்தன.
பெரும்பான்மை பலம்
மொத்தம் 87 சட்டசபை உறுப்பினர்களை கொண்ட ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு 29 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. காங்கிரசுக்கு 12, தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 15 எம்எல்ஏக்கள் பலமுள்ளது. மொத்த பலம் 56 எம்எல்ஏக்கள். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க 44 உறுப்பினர்கள் பலம் மட்டுமே தேவை. எனவே இந்த எம்எல்ஏக்கள் பலத்தை முன்னிறுத்தி ஆட்சியமைக்க உரிமைகோரப்பட்டது.
ஆளுநர் திடீர் முடிவு
ஆட்சியமைக்க உரிமை கோரிய சில நிமிடங்களில், காஷ்மீர் சட்டசபையை கலைக்க ஆளுநர் பரிந்துரைத்துள்ளார். உரிமை கோரும் முன்பாக ஆட்சியை கலைத்திருந்தால் கூட அதில் லாஜிக் இருந்தது. ஆனால், பாஜகவிற்கு கிடைக்காத அதிகாரம் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்கள்.