பெங்களூர் பாரில் பிறந்தநாள் பார்ட்டி: போலீஸ்காரரை அறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.
பெங்களூர்: பெங்களூரில் உள்ள பாரில் பிறந்தநாள் கொண்டாடிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயானந்த் காஷப்பனவர் தனது வேலையை செய்த போலீஸ்காரரை கன்னத்தில் அறைந்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பகல்கோட் மாவட்டத்தில் உள்ள உனகுண்டா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயானந்த் காஷப்பனவர்(42). முன்னாள் அமைச்சர் எஸ். காஷப்பனவரின் மகனான அவர் பெங்களூர் விட்டல் மல்லையா சாலையில் உள்ள பார் ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடினார்.
இரவு 11.30 மணிக்கு விடுதியை மூட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் விதிகளை மீறி அங்கு இரவு 1 மணிவரை மது வழங்கப்பட்டதுடன் சத்தமாக பாடல்களை ஒலிபரப்பியுள்ளனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின்பேரில் 2 போலீசார் அங்கு வந்து நடந்தவை குறித்து இன்ஸ்பெக்டருக்கு தெரிவிக்க வீடியோ எடுத்துள்ளனர்.
இதை பார்த்த எம்.எல்.ஏ. கோபம் அடைந்து நான் யார் என்று தெரியுமா என்று கேட்டுள்ளார். அப்போது விஜயானந்துடன் வந்திருந்த ரவுடி சோமசேகர் கவுடா(43) கிரண் என்ற போலீஸ்காரரின் கையில் இருந்த கேமராவை பறித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட நடுவில் புகுந்த விஜயானந்த் கிரணை அறைந்தார். இதில் தரையில் விழுந்த கிரணை அவருடன் வந்திருந்த மற்றொருவர் தூக்கிவிட்டார்.
எம்.எல்.ஏ. தனது பிறந்தநாளை கொண்டாட ரவுடி கவுடா உள்ளிட்ட 10 முதல் 15 பேருடன் பாருக்கு வந்துள்ளார். 11.30 மணி ஆனவுடன் பார் ஊழியர்கள் கடையை மூட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறியதற்கு கவுடா எனக்கு அவர்களை எல்லாம் நன்கு தெரியும் என்று சில அரசியல்வாதிகளின் பெயரை தெரிவித்துள்ளார். இதையடுத்து தான் பார் ஊழியர்கள் வேறு வழியில்லாமல் மது வழங்கியுள்ளனர்.
முன்னதாக கடந்த வாரம் தான் சென்ற வழியில் போக்குவரத்து நெரிசல் இருந்ததால் கடுப்பான பெங்களூர் கே.ஆர். புரம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பைரதி பசவராஜ் போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவரை கன்னத்தில் அறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.