சர்ரென உயர்ந்த அமுல் பால் விலை.. இதுதான் பாஜகவின் அமிர்த காலமா?.. காங்கிரஸ் கடும் கண்டனம்
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பாலின் விலையானது ரூ.8 வரை உயர்ந்திருக்கிறது.
காந்திநகர்: குஜராத்தின் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு (GCMMF) 'அமுல்' பாலின் விலையை ரூ.3 அளவுக்கு உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இதற்கு காங்கிரஸ் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய விலை ஏற்றத்தின்படி அமுல் சாதாரண பால் அரை லிட்டர் ரூ.27 எனவும் 1 லிட்டர் பால் ரூ.54ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதேபோல சாதாரண பால் 2 லிட்டர் ரூ.108 ஆகவும், 6 லிட்டர் பாலின் விலை ரூ.324 ஆகவும் அதிகரித்துள்ளது. இதேபோல அமுலின் கோல் பால் அரை லிட்டர் ரூ.33 ஆகவும், ஒரு லிட்டர் ரூ.66 ஆகவும், 6 லிட்டர் ரூ.396 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
கடந்த 2022ம் ஆண்டு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மொத்தமாக ரூ.8 வரை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், "பிரதமர் மோடியும், அமித்ஷாவும் வேண்டுமானால் பால் குடிக்காமல் இருக்கலாம். ஆனால் நம் நாட்டு குழந்தைகள் பால் குடிக்க வேண்டியது அவசியம். ஆனால் இப்படி விலை உயர்த்தினால் சாமானியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்" என்று விமர்சித்துள்ளார்.
ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் பாலை வாங்கும் குடும்பம் தற்போது 6 ரூபாய் கூடுதலாக கொடுக்க வேண்டியுள்ளது என்று காங்கிரஸ் ட்வீட் செய்துள்ளது. இந்த தொகை ஒரு மாதத்திற்கு ரூ.180, ஆண்டுக்கு ரூ.2,160 என அதிகரிக்கும். இது அமிர்த காலமா அல்லது 'மீட்புக்காலமா?' என்று காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது. தற்போதைய புதிய விலையுயர்வின் படி அமுல் பசும்பால் அரை லிட்டர் ரூ.28, ஒரு லிட்டர் ரூ.56 எனவும் விற்பனை செய்யப்படுகிறது. எருமை பாலை பொறுத்த அளவில் அரை லிட்டர் ரூ.35, ஒரு லிட்டர் ரூ.70, 6 லிட்டர் பால் ரூ.420ஆக அதிகரித்துள்ளது.