சசி தரூர் அந்த லெவல் வேலைக்கு சரிப்படமாட்டாரு.. கார்கேதான் சரியான சாய்ஸ்.. சொல்வது அசோக் கெலாட்
ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியில் அடிமட்ட நிலையில் பணிபுரிவதற்கு சசி தரூர் பொருத்தமாக இருக்கமாட்டார்; சசி தரூர் மேல்தட்டு அரசியல்வாதி என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் விமர்சித்துள்ளார். ஆகையால்தான் மல்லிகார்ஜூன கார்கேவை ஆதரிக்கிறோம் என்றார் அசோக் கெலாட்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பெரும்பாலான தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸில் அதிருப்தியில் இருக்கும் ஜி23 தலைவர்களும் கூட மல்லிகார்ஜூன கார்கேவை ஆதரிக்கின்றனர்.
தற்போதைய நிலையில் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு முன்னர் போட்டியிடுவதாக அறிவித்திருந்த அசோக் கெலாட், போட்டியிடவில்லை. ராஜஸ்தான் முதல்வர் பதவியை அசோக் கெலாட், ராஜினாமா செய்தால் அப்பதவியை அவரது ஆதரவாளர் ஒருவருக்கே தர வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இதனை வலியுறுத்தி 82 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தனர்.
இதன்பின்னர் தாம் முதல்வர் பதவியிலேயே நீடிப்பதாக கூறிவிட்டார் அசோக் கெலாட். அத்துடன் காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் அறிவித்தார். இதனால் ராஜஸ்தானில் நிலவிய குழப்பம் முடிவுக்கு வந்தது. அதேநேரத்தில் மல்லிகார்ஜூன கார்கேவை தாம் ஆதரிப்பதாகவும் கூறினார் கெலாட்.
கார்கே - சசி தரூர் நேரடி போட்டி.. 'ஜி23’ ஆதரவு யாருக்கு? ரேஸில் முந்தும் கார்கே.. என்ன நடக்கும்?
இதனிடையே செய்தியாளர்களிடம் அசோக் கெலாட் கூறியதாவது: ராஜஸ்தான் அரசாங்கத்தை கவிழ்ப்பதில் பாஜக படுதீவிரமாக முயற்சிக்கிறது. சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் துணையுடன் இந்த சதியை பாஜக அரங்கேற்றி வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கை கோர்த்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலைப் பொறுத்தவரை சசிதரூர் ஒரு மேல்தட்டு அரசியல்வாதி. அவரால் அடித்தட்டு தொண்டர்கள் வரை சென்று பணிபுரிய முடியாது. ஆனால் மல்லிகார்ஜூன கார்கே அப்படி இல்லை. அதனால்தான் கார்கேவை நாங்கள் ஆதரிக்கிறோம் என்றார். இதனிடையே தமது ஆதரவு காங்கிரஸ் தலைவர்கள் யார் யார் என்ற பட்டியலை சசி தரூர் தமது சமூக வலதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.