மக்கள் ஓட்டால் பாஜக ஜெயிக்கலை.... எல்லாம் வாக்கு பதிவு மெஷின் செய்த "மாயம்"... காங்கிரஸ் அக்கப்போர்
குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது எப்படி என்பது குறித்த காரணத்தை மும்பை காங்கிரஸ் கட்சித் தலைவர் சஞ்சய் நிரூபம் தெரிவித்துள்ளார்.
மும்பை: குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் அளித்த வாக்கால் அது வெற்றி பெற்றுவிடவில்லை, எல்லாம் வாக்கு பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்ட முறைகேடுதான் என்று மும்பை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சஞ்சய் நிரூபம் தெரிவித்துள்ளார்.
குஜராத் தேர்தலில் பாஜக 99 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து மும்பையில் அதன் தலைவர் சஞ்சய் நிரூபம் கூறுகையில், ஒட்டுமொத்த குஜராத்தும் பாஜகவுக்கு எதிராக திரண்டிருந்தது.
பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்த நேரத்தில் பெரும்பாலான இருக்கைகள் மக்கள் கூட்டம் இன்றி காலியாகவே இருந்தன. இந்த சூழலில் குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது நம்ப முடியவில்லை.
கருத்துக் கணிப்பிலும் காங்கிரஸ் கட்சி 125 முதல் 140 இடங்களில் வெல்லும் என்றும் பாஜக 40 முதல் 47 இடங்களில் மட்டுமே வெல்லும் என்று இருந்தது. பாஜகவினர் வாக்கு பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யாதிருந்திருந்தால் இன்றைய தேர்தல் முடிவுகள் கருத்து கணிப்புகளின்படி வந்திருக்கும்.
பாஜக வெற்றி பெற மக்கள் அளித்த ஓட்டுகள் காரணமில்லை. எல்லாம் வாக்கு பதிவு இயந்திரத்தில் செய்த முறைகேடுதான் காரணம்.
இந்திய ஜனநாயகத்துக்கு இந்த வாக்கு பதிவு இயந்திரங்கள் மிகப் பெரிய அச்சுறுத்தலாகவே உள்ளன என்றார் அவர்.