எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத மோடியின் சுதந்திரதின உரை: காங்கிரஸ் புகார்
டெல்லி: சுதந்திர தினத்தன்று எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத உரையை பிரதமர் மோடி ஆற்றியதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணீஷ் திவாரி டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
புதிய பிரதமரின் முதல் சுதந்திர தின உரை என்பதால், அடுத்த 5 ஆண்டுகளுக்கான தனது தொலைநோக்குப் பார்வை மற்றும் திட்டங்களை அவர் தெளிவாகத் தெரிவிப்பார் என்று பலரும் எதிர்பார்த்திருக்கக் கூடும்.
ஆனால், சுதந்திர தின உரையில் சிறிய விஷயங்கள் மீது மட்டுமே பிரதமர் கவனம் செலுத்தியது துரதிருஷ்டவசமானது.
இவ்வாறு மணீஷ்திவாரி கூறினார்.
ஷகீல் அகமது
மோடியின் உரை குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஷகீல் அகமது கூறியதாவது:
எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத உரையை பிரதமர் மோடி ஆற்றியுள்ளார். அதில் புதிதாக ஏதுமில்லை. புதிய கருத்துகள், திட்டங்கள், முன்முயற்சிகள் ஆகியவற்றைப் பிரதமர் அறிவிக்கவில்லை.
நாட்டின் வளர்சிக்கு மதவாதமும், சாதியவாதமும் தடையாக இருக்கின்றன என்று மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். பாஜகவின் அரசியலானது மதவாதத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் என்பதை மோடி நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்.
அடிமட்ட அளவில், அவரது கட்சி அனைத்துக் கலவரங்கûலையும் பூசல்களையும் தூண்டு வருகிறது. மோடியின் வளர்ச்சியே மத மோதல்கள் மூலமே ஏற்பட்டது. துப்புரவையும், கழிப்பறைகளின் கட்டுமானத்தையும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
துப்புரவின் அவசியம் குறித்து ஒரு நாளைக்கு 10 முறை தொலைக்காட்சி விளம்பரம் மூலம் நடிகை வித்யா பாலன் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் துப்புரவுத் துறையின் விழிப்புணர்வுப் பிரசாரத்தின் ஒரு பகுதிதான் அது.
ஏழை மக்களுக்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்கித் தரப்போவதாக மோடி குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே, வங்கிக் கிளைகள் இல்லாத கிராமங்களில் ஏழை மக்கள் அஞ்சலகத்தில் கணக்கு தொடங்கலாம் என்பதை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் உறுதிப்படுத்தியது.
இவ்வாறு ஷகீல் அகமது கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications