காங்கிரஸ் செய்த பாவங்களுக்கு மக்கள் விலை கொடுக்கிறார்கள்.. லோக்சபாவில் மோடி கடும் தாக்கு
Recommended Video

டெல்லி: காங்கிரஸ் கட்சி செய்த பாவங்களுக்கு இந்திய மக்கள் இப்போதும் விலை கொடுத்துக் கொண்டிருப்பதாக லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி கடும் குற்றச்சாட்டை முன் வைத்தார்.
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சி உறுப்பினர்களும் பேசியிருந்தனர். உறுப்பினர்களின் உரைக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி இன்று நன்றி தெரிவிப்பு தீர்மானத்தின் மீது லோக்சபாவில் பேசினார்.
பிரதமர் பேச்சை ஆரம்பித்த போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டு அவரது உரைக்கு இடையூறு செய்தனர். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரிக்கைவிடுத்து அந்த மாநில எம்.பிக்களும் கோஷமிட்டனர். வழக்கமாக பிரதமர் பேச்சுக்கு குறுக்கீடாக இதுபோல நடப்பதில்லை என்பதால், அவையில் பரபரப்பு நிலவியது.

வெறுப்பு விதை
இதனிடையே பிரதமர் மோடி பேசியதாவது: வாஜ்பாய் ஆட்சி காலத்தில் 3 புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் மாநில உருவாக்கம் என்பது மிகவும் சிறப்பாக நடந்தது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில், மாநிலங்கள் நடுவே வெறுப்பு தூவப்பட்டு, தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமே மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.

இந்தியா எங்கேயோ போயிருக்கும்
பஞ்சாயத்து முதல் பார்லிமென்ட் வரை ஒரு காலத்தில் காங்கிரஸ் மட்டுமே ஆட்சியில் இருந்தது. எனவே, அவர்கள் எந்த மாதிரி முடிவையும் எடுத்திருக்கலாம். நேர்மையான ஆட்சியை காங்கிரஸ் நடத்தியிருந்தால், இந்தியாவின் நிலையே இப்போது வேறு மாதிரி ஆகியிருக்கும். ஆனால், நாட்டை துண்டு துண்டாக்கியது காங்கிரஸ் கட்சி. ஜனநாயகம் வளர அவைகளில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடாமல், விவாதத்தில் ஈடுபட வேண்டும்.

காங்கிரஸ் பாவங்கள்
காங்கிரஸ் கட்சி செய்த பாவங்களுக்கு, மக்கள் விலை கொடுத்து கொண்டிருக்கிறார்கள் மற்ற நாடுகளுக்கு இணையாக இந்தியா வளர்ந்து வருகிறது. கடந்த காலத்தில் காங்கிரஸ் என்ன விதைத்ததோ அதனையே தற்போது அறுவடை செய்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு சர்தார் வல்லபாய் பட்டேல் முதல் பிரதமராக பொறுப்பேற்றிருந்தால், இன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்ற ஒன்றே இருந்திருக்காது. காஷ்மீர் முழுக்க இந்தியாவிடம் இருந்திருக்கும். இந்தியாவுக்கு பிரச்சினையே ஏற்பட்டிருக்காது. ஆனால், ஒரு குடும்பத்தின் வளர்ச்சியில் மட்டுமே காங்கிரஸ் அக்கறை காட்டியது

தமிழகத்தில் காங்கிரஸ் செய்தது என்ன
தமிழகம், கேரளா, ஆந்திர மாநிலங்களின் வளர்ச்சிக்கு காங். கட்சி என்ன செய்தது. காங். கட்சியின் அலட்சியத்தால், ஆந்திர மாநில எம்.பிக்கள் சிறப்பு அந்தஸ்து கோருகின்றனர். பஞ்சாப்பில் அகாளி தளத்தை காங்கிரஸ் எப்படி நடத்தியது? தமிழகத்தில் காங்கிரஸ் எப்படி நடந்து கொள்கிறது? பல்வேறு மாநிலங்களின் ஆட்சியை கலைத்தது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு. எனவே காங்கிரஸ் கட்சி ஜனநாயகம் குறித்து பேசாமல் இருப்பதே நல்லது.

அவமரியாதைகள்
ஆந்திராவின் பெருமைக்குரிய மகனான நீலம் சஞ்சீவ ரெட்டிக்கு காங்கிரஸ் செய்த அவமரியாதையை நாம் மறக்க முடியாது. அவரை இழிவுபடுத்தினர். ராஜிவ்காந்தியால் ஹைதராபாத் விமான நிலையத்தில் தலித் வகுப்பை சேர்ந்த முதல்வர் அவமரியாதை செய்யப்பட்டார். இந்தியாவிலுள்ள யாரும் காங்கிரஸ் கட்சியிடம் ஜனநாயக பாடம் கேட்க தயாராக இல்லை.

வேலை கலாச்சாரம் மாற்றம்
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, நாட்டின் வேலை திட்ட கலாசாரத்தையே மாற்றியுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் அரசு பணிகள் முடிக்கப்படுகின்றன. கடந்த அரசுகளை விட அதிக வேகத்தில் சாலை அமைக்கப்படுகிறது. புதிய கட்டுமான திட்டங்கள் வேகமாக நடக்கின்றன. நீங்கள் 59 கிராமங்களுக்கு பைபர் ஆப்டிக்கல் நெட்வொர்க்கை கொடுக்க முடிந்தது. ஆனால், 3 வருடங்களில், 1 லட்சம் கிராமங்களில் இந்த சாதனையை நாங்கள் நிகழ்த்திவிட்டோம். இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications