கோவாக்சின்.. இந்திய பரிசோதனையின் முதல் கட்டம் வெற்றி.. 2வது கட்டத்துக்கு தயார்!
புவனேஸ்வர்: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு ஊசியான கோவாக்சின் முதல் கட்ட மனித பரிசோதனையில் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்றும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றும் புவனேஸ்வர் எஸ்யுவி மருத்துவமனை மருத்துவர் வெங்கட ராவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து இருக்கும் கொரோனா தடுப்பு ஊசியான கோவாக்சின் மனித பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வுக்கு நாடு முழுவதும் எய்ம்ஸ் உள்பட 12 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டு இருந்தது. இந்த மருத்துவமனைகளில் நடத்தி முடிக்கப்பட்ட முதல் கட்ட மனித பரிசோதனைகளின் முடிவுகள் தொடர்பான ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. முதற்கட்ட ஆய்வுக்கு 324 பேர் நாடு முழுவதும் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு இருந்தனர்.
இதுகுறித்து புவனேஸ்வரில் இருக்கும் எஸ்யுஎம் மருத்துவமனையின் மருத்துவ அறிவியல் தலைமை மருத்துவர் வெங்கட ராவ் கூறுகையில், ''முதல் கட்ட மனித பரிசோதனை தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. இரண்டாம் கட்ட ஆய்வுக்கு தயாராகி வருகிறோம். முதல் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு அவர்களுக்கு இந்த தடுப்பு ஊசி எந்தளவிற்கு பாதுகாப்பாக இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஊசியை எடுத்துக் கொண்டவர்களுக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை.
இந்த ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இரண்டு முறை டோஸ் அளிக்கப்பட்டது. முதல் டோஸ் முதல் நாளில் செலுத்தப்பட்டு, ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. இரண்டாவது டோஸ் 14வது நாளில் செலுத்தப்பட்டு, ரத்த மாதிரி எடுக்கப்பட்டது.
டெல்லி லோதி மயானத்தில்.. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் தகனம்.. அஞ்சலி!
இதைத் தொடர்ந்து 28, 42, 104, 194 ஆகிய நாட்களில் ரத்த மாதிரிகள் எடுக்கப்படும். இந்த ஆய்வில் கலந்து கொள்வதற்கு பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். விருப்பம் இருப்பவர்கள் இரண்டாம் கட்ட ஆய்வுக்கு தங்களது பெயரை http://ptctu.soa.ac.in என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம்'' என்றார்.