கொரோனாவால் தலைகீழாக மாறிய வாழ்க்கை.. வாட்ஸ் அப்பில் கதறி அழுதபடி பள்ளி உரிமையாளர்கள் தற்கொலை
விஜயவாடா: கொரோனா ஊரடங்கு காரணமாக ஆந்திராவில் ரூ.2 கோடி கடன் பிரச்னையில் சிக்கிய பள்ளி நிர்வாக தம்பதி, வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் கர்னூல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம், கர்னூலை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி ரோகிணி. இவர்கள் தாங்கள் வசிக்கும் கோலிகுண்டலா நகரில் 'லைப் எனர்ஜீ' என்ற பெயரில் ஆங்கில வழி பள்ளிக்கூடத்தை நடத்தி வந்தார்கள்.
கொரோனா பிரச்சனை வரும் வரை எல்லாம் நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது. பள்ளிக்கூடத்தில் அதிக மாணவர்கள் படித்து வந்தனர். இதனால், சுப்பிரமணியம் தம்பதியினர் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்கள். பள்ளி சிறப்பாக போனதால் கடந்தாண்டு ஜனவரியில் பள்ளியை விரிவுப்படுத்த, சிலரிடம் ரூ.2 கோடி வரை கடன் வாங்கி இருக்கிறார்கள்.

கல்வி கட்டணம்
கட்டிட பணிகள் நடந்து வந்தது . ஆனால் கடந்தாண்டு மார்ச்சில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பள்ளிகள் மூடப்பட்டது. ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டது. தொடக்கத்தில் பெற்றோர்கள் ஓரளவு கல்விக் கட்டணம் செலுத்தியிருக்கிறார்கள். ஆனால் அதுவும் பின்னர் கிடைக்கவில்லை.

கட்ட முடியவில்லை
இதனால், வாங்கிய கடனுக்கு வட்டி கூட செலுத்த முடியாமல் சுப்பிரமணியம்-ரோகிணி தம்பதி அவதிப்பட்டுள்ளனர். கடன் கொடுத்தவர்கள் தினமும் கடனை திரும்ப கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. வேதனை அடைந்த தம்பதி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

வீடியோ
கடந்த 16ம் தேதி இருவரும் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு சென்று வழிபாடு செய்திருக்கிறார்கள். பின்னர், காரில் அமர்ந்தபடி இருவரும் வீடியோ பதிவு செய்தனர். அதில், கதறி அழுதபடி இருவரும், 'கடன் அதிகமாகிவிட்டது. இதனால் ஏற்பட்ட நெருக்கடியால் எங்களால் வாழ முடியவில்லை. இதனால், எங்களுக்கு தற்கொலை முடிவு தவிர வேறு வழியில்லை. அனைவரும் எங்களை மன்னித்து விடுங்கள்,' என பேசினார்கள்.

கர்னூல் சோகம்
இதை தங்களின் உறவினர்கள், நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தனர். அதிர்ச்சியடைந்த அவர்கள், காரில் விஷம் குடித்து மயங்கி கிடந்த சுப்பிரமணியம்-ரோகிணி தம்பதியை மீட்டு, கர்னூலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் கர்னூல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications