இந்தியாவுக்குள்ளேயே வராதீங்க.. டெல்லி ஏர்போர்ட்டிலேயே பிரிட்டன் எம்பியை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
டெல்லி: இந்திய அரசின் காஷ்மீர் கொள்கையை விமர்சித்து வரும் பிரிட்டன் எம்பி டெபி ஆபிரகாம்ஸ் இன்று புதுடில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய நிலையில், அவரை இந்தியாவுக்குள் நுழைய இந்திய அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யுனியன் பிரதேசங்களாக பிரித்தது.
இதை பிரிட்டனைச் சேர்ந்த எம்பி டெபி ஆபிரகாம்ஸ் கடுமையாக விமர்சித்தார். பிரிட்டன் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எம்பியான இவர் காஷ்மீர் குறித்த இந்திய அரசின் கொள்கையை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனால் இந்திய அரசு இவர் மீது அதிருப்தியில் உள்ளது.
இந்த சூழ்நிலையில் டெபி ஆபிரகாம்ஸ் தனது உதவியாளர் ஹர்பிரீத் உபால் உடன் தனிப்பட்ட பயணமாக இந்தியாவுக்கு இன்று வந்தார். டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்திற்கு துபாய் விமானம் மூலம் இன்று காலை 9 மணிக்கு வந்திறங்கிய டெபியை இந்தியாவுக்கு அனுமதிக்க முடியாது என இந்திய குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில் ஆபிரகாம்ஸ் நுழைவதை மறுப்பதற்கும் அவரது விசாவை ரத்து செய்வதற்கும் குடிவரவு அதிகாரிகள் எந்த காரணத்தையும் குறிப்பிடவில்லை என்று அவரது உதவியால் உபால் கூறினார், விசா நகல் 2020 அக்டோபர் வரை செல்லுபடியாகும் என்ற நிலையில், ஏன் நிராகரிக்கப்பட்டத என்பது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.