வதோதரா நகருக்குள் நதி வெள்ளத்துடன் நீந்தி வந்த முதலைகள்! மக்கள் பீதி
வதோதரா: ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வதோதரா நகருக்குள் புகுந்த நிலையில் வெள்ளத்துடன் சேர்ந்து முதலை மற்றும் பாம்புகளும் ஊருக்குள் வந்ததால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
குஜராத்தின் வதோதரா நகரின் அருகேயுள்ள விஸ்வமித்ரி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், வெள்ளம் நகருக்குள் புகுந்தது. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் மேல் மாடிகளில் தஞ்சம் புகுந்தனர். தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் பிற பகுதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
{ventuno}
மக்களை காப்பாற்றும் பணியில் தீயணைப்பு துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். சித்தார்த் பங்களா என்ற பகுதியில் நள்ளிரவில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு துறை வீரர் ஜடேஜா கூறுகையில், "நாங்கள் படகு மூலமாக மக்களை காப்பாற்றி கொண்டு சென்றபோது எங்கள் படகின் அருகில் முதலைகள் நீந்தி வருவதை பார்த்தோம்.
ஆனால் இதுகுறித்து மக்களிடம் தெரிவிக்கவில்லை. பயத்தில் படகை சாய்த்துவிடுவார்கள் என்பதால் ரகசியமாக வைத்துக் கொண்டோம். முதலைகள் மட்டுமின்றி பாம்புகளையும் பார்த்தோம்" என்றார்.
மீட்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் முதலைகள் தென்பட்டாலும், அவை இடையூறு எதுவும் செய்யாமல் இருந்துள்ளன. விஸ்வமித்ரி நதியில், சுமார் 204 முதலைகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளதால் வதோதரா இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளது.
இதனிடையே சிறிய குட்டைபோன்ற நீர் இருந்தாலும், முதலைகள் இருக்குமோ என்ற அச்சத்தில் வதோதரா மக்கள் வாழ்ந்து வருகின்றனர். முதலைகளை கண்டுபிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.