என்கவுண்ட்டரின் போது சகாக்களுக்கு உதவாத 17 வீரர்கள் சஸ்பெண்ட் - சி.ஆர்.பி.எப் அதிரடி
டெல்லி: நக்சல்கள் மீதான என்கவுண்ட்டர் நடவடிக்கைகளின் போது, தங்களது சகாக்களுக்கு சரிவர உதவாத 17 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள தஹக்வாடா பகுதியில் கட்டிடத் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பாக சி.ஆர்.பி.எப். வீரர்கள் பணியில் இருந்தனர். அப்போது அவர்களுக்கும், நக்ஸல்களுக்கும் இடையே மோதல் உண்டானது.
அத்தாக்குதலில் சில பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்தனர். சக ஊழியர்களிடமிருந்து சரிவர உதவி கிடைக்காததாலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், ஓர் உதவி ஆய்வாளர், இரண்டு துணை உதவி ஆய்வாளர்கல் மற்றும் 14 கான்ஸ்டபிள்கள் குற்றவாளிகள் என்பது உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து என்கவுண்ட்டர் நடவடிக்கையின் போது சக ஊழியர்களுக்கு உதவாமல் உயிரிழப்புகளுக்கு காரணமான, அந்த 17 வீரர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.