உச்சகட்ட பரபரப்பு.. காவிரி வழக்கில் பிப். 23க்குள் உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாகலாம்.. ஏன் தெரியுமா?
Recommended Video

டெல்லி: காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்கள் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.
இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்று வந்தது. இறுதி விசாரணையில் இதுவரை நடைபெற்ற வாதங்கள், ஆவணங்கள், நீர்வள நிபுணர்களின் கருத்துகள் அடங்கிய எழுத்துப்பூர்வமான அறிக்கைகள் உள்ளிட்டவற்றை அந்தந்த மாநில வக்கீல்கள் சமர்ப்பிக்க உத்தரவிட்டதுடன், வழக்கு தொடர்பான தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் கடந்த செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
இந்நிலையில் பெங்களூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய காவிரி நீர் தேவைப்படுகிறது என கோரிக்கைவிடுத்து, தனியார் தொண்டு நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.

4 வாரத்தில் தீர்ப்பு
இந்த வழக்கு விசாரணையின் போது காவிரி நதி நீர் பங்கீடு வழக்கில் 4 வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 2வது வாரத்தில் கூறியிருந்தது.

ஹோலி விடுமுறை
இதன்படி பார்த்தால், இம்மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வெளியாகலாம். பிப்ரவரி 24ம் தேதி முதல் ஹோலி பண்டிகையை முன்னிட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறையாகும். மேலும், வழக்கை விசாரித்த மூத்த நீதிபதி அமித்தவா ராய், மார்ச் 1ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ளார். எனவே பிப்ரவரி 23ம் தேதிக்கு முன்பாக தீர்ப்பு வெளியாகிவிடும் என்பது பெரும்பாலானோர் எதிர்பார்ப்பு.

முக்கியத்துவமான வழக்கு
விடுமுறை காலத்தில், நீதிபதி தீர்ப்பு வழங்க கூடாது என்ற எந்த நிர்பந்தமும் கிடையாதுதான். ஆனாலும், இந்த வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, விடுமுறை தொடங்கும் முன்பாகவே, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்தால்தான் தேர்தலின்போது காவிரி பாசன பகுதிகளில் வாக்கு வேட்டையாட முடியும் என கர்நாடக காங்கிரஸ் அரசு எதிர்பார்த்து காத்திருக்கிறது.

தமிழர்கள் மீது வன்முறை
அதேநேரம், தீர்ப்பு காரணமாக, பெங்களூர் உட்பட கர்நாடகா முழுவதிலுமுள்ள தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. காவிரி நடுவர்மன்ற இடைக்கால தீர்ப்பு, இறுதி தீர்ப்பு காலகட்டங்களில் தமிழர்கள் மீது வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications