இந்தியாவில் சைபர் குற்றத்தால் ரூ. 24,630 கோடி இழப்பு!
டெல்லி: இந்தியாவில் இணையதளம் தொடர்பான குற்றங்களால் நடப்பாண்டில் 24,630 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் என தெரியவந்துள்ளது.
சைமன்டெக் நிறுவனம் இது தொடர்பாக ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது. 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2013 ஆண்டு ஜூலை வரை ஆய்வு நடைபெற்றது.
1000 இந்தியர்கள் உள்ளிட்ட 24 நாடுகளைச் சேர்ந்த 13000 இளைஞர்கள் இதில் பங்கேற்றனர்.
அதிக இழப்பு
கணினியை பாதிக்கும் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பிறகு அதை சரி செய்ய மென்பொருள் மற்றும் வன்பொருட்களை மாற்றிய வகையில் நடப்பாண்டில் 24,630 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என சைமன்டெக் கூறியுள்ளது.
மொபைல் போன்களில்
இந்தியர்களில் பெரும்பாலோர் அலுவல் ரீதியாக பயன்படுத்தும் மொபைல் ஃபோன்களை தனிப்பட்ட முறையிலும் உபயோகிப்பதால் அலுவல் ரீதியான முக்கியமான தகவல்கள் களவு போகவும் வாய்ப்புள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
சைபர் குற்றங்கள்
கடந்த 12 மாதங்களில் மட்டும் இந்தியாவில் 56 சதவிகிதம் சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் பலவித அனுபவங்களை கூறியுள்ளனர்.
ஆசிய பசுபிக் நாடுகளில் 11 சதவிகிதம் இந்தியாவில் சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெற்றுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதி நவீன முறை
இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் இப்போது அதிநவீன வழிமுறைகளை பின்பற்றத் தொடங்கி விட்டதாக சைமன்டெக் கூறியுள்ளது.